ADDED : ஜூலை 30, 2026 11:46 PM

திருச்சுழி: திருச்சுழி அருகே மறவர் பெருங்குடி - தும்மு சின்னம்பட்டி ரோடு பணி துவங்கிய நிலையில், பல மாதங்களாக கிடப்பில் போடப்பட்டுள்ளதால் கிளம்பும் தூசியால் மாணவர்களுக்கும், மக்களுக்கும் போக்குவரத்திற்கும் சிரமமாக உள்ளது.
திருச்சுழி எம். ரெட்டியபட்டி அருகில் உள்ள மறவர் பெருங்குடி - தும்மு சின்னம்பட்டி ரோட்டை 10 க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பயன்படுத்தி வந்தனர். ராமநாதபுரத்தில் இருந்து கமுதி வழியாக, இந்த ரோடு வழியாக பந்தல்குடி கோவில்பட்டி, தூத்துக்குடி, இருக்கன்குடி உள்ளிட்ட ஊர்களுக்கு சென்று வந்தனர். ரோடு குண்டும், குழியுமாக ஆனதால், பிரதம மந்திரி கிராம சாலைகள் திட்டத்தின் கீழ், 302.25 லட்சம் நிதியில் தார் ரோடு அமைப்பதற்கான பணி 7 மாதங்களுக்கு முன்பு துவங்கியது.
துவங்கிய வேகத்தில் ஜல்லி கற்கள் பரப்பிய நிலையில் பணி நின்றது. இதனால், மக்கள் டூவீலர்களில் செல்ல முடியாமல் அவதிப்பட்டனர். தங்கள் விவசாய நிலங்களுக்கு சென்று வர இந்த ரோட்டை தான் பயன்படுத்துவர். கற்களாக இருப்பதால் ரோட்டில் நடக்க முடியவில்லை. மேலும், ரோட்டில் இருந்து தூசி கிளம்புவதால் பள்ளி மாணவர்கள் சிரமப்படுகின்றனர். வாகன ஓட்டிகளுக்கு மூச்சு திணறல் ஏற்படுகிறது.
ஊராட்சி நிர்வாகமும் ஆய்வு செய்து பணியை விரைவாக முடிக்க ஒப்பந்ததாரரை அறிவுறுத்துவதில் மெத்தனமாக உள்ளனர். தி.மு.க., ஆட்சியில் பணி நடந்ததால், ஒப்பந்தகாரருக்கும் பணியை முடிக்க வேண்டும் என்பதில் அக்கறை இல்லை. ரோடு அமைக்காவிட்டாலும் பரவாயில்லை தூசு பறக்காமல், மண் அடித்து சமன் செய்தால் போதும் என, மக்கள் நொந்து கொள்கின்றர். மாவட்ட நிர்வாகம் சாலை பணியை விரைவில் முடிக்க ஊராட்சி ஒன்றிய நிர்வாகத்திற்கு அறிவுறுத்த வேண்டும்.
