/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
சாட்சியாபுரம் ரயில்வே பால பணிகள் விறுவிறு 2025 டிச. ல் பயன்பாட்டிற்கு வர வாய்ப்பு
/
சாட்சியாபுரம் ரயில்வே பால பணிகள் விறுவிறு 2025 டிச. ல் பயன்பாட்டிற்கு வர வாய்ப்பு
சாட்சியாபுரம் ரயில்வே பால பணிகள் விறுவிறு 2025 டிச. ல் பயன்பாட்டிற்கு வர வாய்ப்பு
சாட்சியாபுரம் ரயில்வே பால பணிகள் விறுவிறு 2025 டிச. ல் பயன்பாட்டிற்கு வர வாய்ப்பு
ADDED : டிச 16, 2024 04:51 AM

சிவகாசி : சிவகாசி சாட்சியாபுரம் ரயில்வே பாலத்திற்கான 17 துாண்கள் அமைக்கும் பணி நிறைவடைந்த நிலையில், பீம் அமைக்கும் பணி நடந்து வருகிறது. 2025 டிச. ல் பயன்பாட்டிற்கு வர வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
சிவகாசி -- ஸ்ரீவில்லிபுத்துார் ரோட்டில் சாட்சியாபுரம் ரயில்வே கிராசிங்கில் மேம்பாலம் அமைக்கும் திட்டத்திற்கு பிப். ல் பிரதமர் மோடி காணொலி மூலம் அடிக்கல் நாட்டினார். சிவகாசி பெரியகுளம் கண்மாய் இரட்டை பாலம் முதல் சாட்சியாபுரம் பஸ் ஸ்டாப் வரை 700 மீட்டர் நீளம், 12 மீட்டர் அகலத்தில் ரயில்வே மேம்பாலம் அமைக்க ரூ.61.74 கோடி நிதி ஒதுக்கீடு செய்து நெடுஞ்சாலை துறை சார்பில் ஒப்பந்தம் வெளியிடப்பட்டது.
மேம்பாலம் அமைப்பதற்காக ரூ.28 கோடி மதிப்பில் 23 பேரிடம் இருந்து 2,818 சதுர மீட்டர் நிலம் கையகப்படுத்தப்பட்டது. ஜூலை 26 ல் அமைச்சர்கள் சாத்துார் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு ஆகியோர் பூமி பூஜை செய்து மேம்பாலம் கட்டுமான பணியை தொடங்கி வைத்தனர். ரயில்வே தண்டவாளத்திற்கு கிழக்கு பக்கம் 11 துாண்கள், மேற்கு பக்கம் 6 துாண்கள் என மொத்தம் 17 தூண்கள் அமைக்கும் பணி நிறைவடைந்துள்ளது.
இதையடுத்து மேம்பால பணிக்காக அமைக்கப்பட்ட துாண்களின் தரம், உறுதித்தன்மை குறித்து நெடுஞ்சாலைத்துறை தரக்கட்டுப்பாட்டு அலகு அதிகாரிகள் நவீன இயந்திரம் மூலம் பரிசோதனை செய்தனர். அதனைத் தொடர்ந்து தற்போது பீம் அமைக்கும் பணி விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
நெடுஞ்சாலைதுறை அதிகாரிகள் கூறுகையில், ரயில்வே மேம்பாலத்திற்கான 17 துாண்கள் அமைக்கும் பணி நிறைவு பெற்றுள்ளது. அடுத்ததாக துாண்களை இணைக்கும் பீம் அமைக்கும் பணிகள் துவங்கி உள்ளது.
ரயில்வே மேம்பாலம் அமைக்கும் பணிக்கான திட்ட காலம் 2025 டிச., வரை உள்ள நிலையில், திட்டமிட்ட காலத்தில் பணிகள் முடிந்து பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும், என்றனர்.