/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
பணியாளர்கள் பற்றாக்குறை: சுகாதாரப்பணி தொய்வு
/
பணியாளர்கள் பற்றாக்குறை: சுகாதாரப்பணி தொய்வு
ADDED : நவ 29, 2024 05:21 AM

சிவகாசி: சிவகாசி மாநகராட்சியில் துாய்மை பணியாளர்கள் பற்றாக்குறையால் சுகாதாரப் பணிகளில் தொய்வு ஏற்படுகிறது,அடிப்படை வசதிகள் செய்து தரவில்லை என தி.மு.க., கவுன்சிலர் கூட்டத்தில் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
சிவகாசி மாநகராட்சி அலுவலகத்தில் கவுன்சிலர்கள் கூட்டம் நடந்தது. மேயர் சங்கீதா தலைமை வகித்தார். கமிஷனர் கிருஷ்ணமூர்த்தி முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில் நடந்த விவாதம்
சசிகலா, தி.மு.க.,: எனது வார்டுக்கு உட்பட்ட பன்னீர் தெப்பம் அருகே அங்கன்வாடி மையம் உள்ளது. இந்தக் கட்டடம் நன்றாக உள்ள நிலையில் அதனை இடித்துவிட்டு புதிய கட்டடம் கட்ட நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.செய்து கொடுக்க வேண்டிய கோரிக்கைகளை செய்யாமல் வீணாக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீநிகா தி.மு.க.,: நான் அ.தி.மு.க.,வில் இருந்து வந்திருந்தாலும் தி.மு.க.. விற்கு விஸ்வாசமாகத்தான் உள்ளேன். என்னைப் பற்றி மேயரின் கணவர் மரியாதை இல்லாமல் பேசியுள்ளார். எனது வார்டில் எந்த குறைகள் சொன்னாலும் செய்வதில்லை.
சேதுராமன், தி.மு.க.,: திருத்தங்கலில் 12 வார்டுகளுக்கு 25 ஒப்பந்த துாய்மை பணியாளர்கள் உள்ளனர். இதே போல்தான் அனைத்து பகுதிகளிலும் துரய்மை பணியாளர்கள் பற்றாக்குறைவாக உள்ளது. இவர்களால் சுகாதாரப் பணிகள் மேற்கொள்ள முடியவில்லை.
குமரி பாஸ்கர் பா.ஜ.,: பிள்ளக்குழி பகுதியில் கட்டப்பட்டு வரும் புதிய மாநகராட்சி அலுவலகத்திற்கு பின்பகுதியில் கட்டப்பட்டு வரும் வணிக வளாகங்கள் பணி கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதில் தினமும் சமூக விரோத செயல்கள் நடக்கிறது.
கமிஷனர்: வணிக வளாகம் கட்டும் பணி தொடர்ந்து நடைபெறும். சமூக விரோத செயல்கள் குறித்து போலீசாரிடம் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ராஜேஷ் ம.தி.மு.க.,: பிரதான தண்ணீர் தொட்டி வளாகங்களில் காவலாளிகள் இல்லை. இதனால் அசம்பாவிதம் ஏற்பட வாய்ப்புள்ளது. இதில் காவலாளி நியமிப்பதோடு கண்காணிப்பு கேமராவும் அமைக்க வேண்டும். மாநகராட்சியில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் சுற்றுவட்டச் சாலை பணியை விரைவில் துவக்க வேண்டும்.
சாமுவேல், சுயே.,: மாநகராட்சி சார்பில் குடிநீர் வினியோகம் செய்ய பயன்படும் வாகனங்கள் துருப்பிடித்த நிலையில் உள்ளது. 35 ஆண்டுகளுக்கு முன்பு வாங்கப்பட்ட இந்த வாகனங்கள் மூலமாக மாநகராட்சி பள்ளிகளுக்கு சுகாதாரமற்ற குடிநீர் வினியோகம் செய்யப்படுகின்றது. இதனால் பள்ளி மாணவர்கள் தொற்று நோயால் பாதிக்கப்படுகின்றனர்.
ரவிசங்கர், காங்.,: பொத்தமரத்து ஊருணி துார்வாரும் பணி கிடப்பில் போடப்பட்டுள்ளது. ஒரு ஆண்டுக்கு முன்பு கட்டப்பட்ட நகர்ப்புற சுகாதார நிலையம் இதுவரையில் பயன்பாட்டிற்கு வரவில்லை.
கமிஷனர்: பொத்தமரத்து ஊருணி துார்வாருவதற்காக ஆக்கிரமிப்பு அகற்றும் பணி நடந்தது. இது குறித்து நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு தீர்ப்பு வந்துள்ளது. ஆறு மாதத்தில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு துார்வாரப்படும்.
மாரீஸ்வரி தி.மு.க.,: 13 வது வார்டில் பெயர் மாற்றத்திற்கு விண்ணப்பித்து ஆறு மாதமாகியும் கண்டுகொள்ளவில்லை. பிள்ளையார் கோயில் தெரு, சபரிமலையான் கோயில் சந்து பகுதியில் மோட்டார் பழுதாகி 7 மாதம் ஆகின்றது. ஆனால் இதுவரையிலும் சரி செய்யப்படவில்லை.
இவ்வாறு விவாதம் நடந்து கொண்டிருந்தபோது தி.மு.க., கவுன்சிலர் சந்தனமாரி திடீரென தனது இருக்கையை விட்டு இறங்கி வந்து கூட்ட அரங்கில் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
அவர், எனது வார்டில் சுகாதார வளாகம் செயல்படவில்லை, ரோடு சீரமைக்கப்படவில்லை அடிப்படை வசதிகள் செய்து தரவில்லை எனக் கூறினார்.
தொடர்ந்து அவரிடம் மேயர், கமிஷனர் அனைத்து வசதிகளும் ஏற்படுத்தி தரப்படும் என கூறியதையடுத்து எழுந்து தனது இருக்கைக்கு சென்றார்.