/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
வாறுகாலின்றி தேங்கி நிற்கும் கழிவுநீர், கொசுத்தொல்லை
/
வாறுகாலின்றி தேங்கி நிற்கும் கழிவுநீர், கொசுத்தொல்லை
வாறுகாலின்றி தேங்கி நிற்கும் கழிவுநீர், கொசுத்தொல்லை
வாறுகாலின்றி தேங்கி நிற்கும் கழிவுநீர், கொசுத்தொல்லை
ADDED : டிச 28, 2024 05:33 AM

சாத்துார் : வாறுகாலின்றி தேங்கி நிற்கும் கழிவுநீர், கொசு தொல்லை, கழிப்பறை, வசதிகள் இல்லாததால் இ. முத்தாண்டியா புரத்தில் மக்கள் அவதியடைந்து வருகின்றனர்.
வெம்பக்கோட்டை ஊராட்சி ஒன்றியம் இ.முத்தாண்டியாபுரத்தில் சிமிண்ட் ரோடு கற்கள் பெயர்ந்து கால்களை பதம் பார்க்கும் வகையில் உள்ளது.
வீடுகளில் இருந்து வரும் கழிவுநீர் செல்ல முறையான வாறுகால் இல்லை. இதனால் கழிவு நீர் முழுவதும் தெருக்களின் நடுவில் ஆறாக பெருகி ஒடுகிறது. ஊராட்சி அலுவலகம் முன்புள்ள வாறுகால், ஓடையில் பிளாஸ்டிக் கழிவுகள் குவிந்து உள்ளது.
குப்பை வாறுகாலில் தேங்கிக் கிடப்பதால் கழிவுநீர் ஆங்காங்கே தேங்கி நிற்கிறது. இதில் உற்பத்தியாகும் கொசுக்களால் மக்கள் பல்வேறு நோய்களுக்கு ஆளாகி தவிக்கும் நிலை உள்ளது.
ஊராட்சிதெருக்களில் சுகாதார கேடு ஏற்படுத்தும் வகையில் ஆங்காங்கே குப்பை கொட்டப்பட்டு குப்பை மேடாக உள்ளது. இதன் காரணமாக துர்நாற்றம் வீசுவதோடு தொற்றுநோய் பரவும் அபாயமும் உள்ளது.
பொது சுகாதார வளாகம் சேதம் அடைந்துள்ளது. புதியதாக பொது சுகாதார வளாகம் கட்டப்பட்டும் அது செயல்பாட்டிற்கு வரவில்லை. காளியம்மன் கோயில் தெரு முழுவதும் மண் ரோடாக உள்ளது.
மழைக்காலத்தில் இந்த பகுதியில் கழிவுநீரும் மழை நீரும் பாதையில் தேங்கி நிற்பதால் அதில் நடந்து வீட்டிற்கு செல்லும் நிலை உள்ளது.
ரோடு, வாறுகால் தேவை
விஜயா, குடும்பத் தலைவி: காளியம்மன்கோயில் தெரு வண்ணாரப்பேட்டை தெரு கிழக்குத் தெருகளில் ரோடு வசதி இல்லை. காளியம்மன் கோயிலுக்கு பின்புறம் உள்ள தெருவில் வாறுகால் இல்லாததால் சாக்கடை பாதையில் செல்கிறது.
இதில் கால் வைத்து தான் குழந்தைகளும் முதியோர்களும் நடந்து செல்கின்றனர். சுகாதாரக் கேடு அதிகமாக உள்ளது.
கொசுக்கடியால் அவதி
கணேசன், குடும்பத் தலைவர்: வாறுகால் சுத்தம் செய்ய ஆட்கள் வருவதில்லை. வாறு கால் எல்லாம் நிரம்பி வழிகின்றன. துப்புரவு பணியாளர்கள் இல்லாத நிலையில் கழிவு நீரில் உற்பத்தியாகும் கொசுக்கள் கடிப்பதால் பலரும் மர்ம காய்ச்சல் ஏற்பட்டு அவதிப்படுகின்றனர். வாறுகால் சுத்தம் செய்ய வேண்டும்.
தேங்கும் கழிவுநீர்
வடிவேல், குடும்பத் தலைவர்: ஊரில் உள்ள வீடுகளில் இருந்து வரும் கழிவுநீர் எல்லாம் ஓடை வழியாக தான் செல்லும்ஓடையை துார்வாராமல் போட்டுவிட்டதால் கழிவுநீர் செல்லாமல் தேங்கி நிற்கிறது. ஓடையை துார்வார நடவடிக்கை எடுக்க வேண்டும். என்றார்.
உப்புச் சுவையான குடிநீர்
மாரியப்பன், குடும்பத்தலைவர்: ஊராட்சியில் வினியோகம் ஆகும் தண்ணீர் உப்புச் சுவையாக உள்ளது.பாத்திரம் தேய்க்கவும் துணி துவைக்கவும் பயன்படுத்தி வருகிறோம். மானூர் குடிநீர் திட்டத்தின் கீழ் முன்பு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டது. தற்போது இந்த தண்ணீர் வரவில்லை. வண்டிகளில் விற்பனை செய்யப்படும் மினரல் வாட்டரை விலைக்கு வாங்கி குடிக்க பயன்படுத்தி வருகிறோம். என்றார்.