சாத்துார் : வெம்பக்கோட்டைஊராட்சி ஒன்றியம் சல்வார் பட்டி ஊராட்சிக்குட்பட்ட அச்சங்குளத்தில் கழிப்பறை, ரோடு, வாறுகால் வசதி இன்றி மக்கள் அவதிப்படுகின்றனர்.
அச்சங்குளத்தில் ஏழு தெருக்கள் உள்ளது. அனைத்து தெருக்களிலும் முறையான ரோடு வசதி இல்லை. கரடு முரடாகவும் மண்சாலையாகவும் உள்ளது.
மூன்று தெருக்களில் மட்டும் கழிவு நீர் செல்வதற்கு வாறுகால் அமைத்துள்ளனர்.
இந்த வாறு கால் முறையாக அமைக்கப்படாததால் ஆங்காங்கே கழிவு நீர் தேங்கி நிற்கிறது. இதில் கொசு உற்பத்தி அதிகமாக உள்ளது. ரோட்டில் இரு புறத்தையும் மக்கள் திறந்தவெளி கழிப்பறையாக பயன்படுத்தி வருகின்றனர்.
இதனால் துர்நாற்றம் வீசுவதோடு தொற்றுநோய் அபாயம் உள்ளது. அச்சங்குளத்தில் இருந்து இரவார் பட்டி, சல்வார் பட்டி செல்வதற்காக வைப்பாற்றில் பாலம் கட்டப்பட்டது.
இந்தப் பாலம் இடிந்து 20 ஆண்டுகளுக்கும் மேலாகும் நிலையில் அருகில் உள்ள ஊருக்கு செல்ல மக்கள் சாத்துார் வந்து 15 முதல் 20 கிலோமீட்டர் சுற்றிச் செல்லும் நிலை உள்ளது.
ஊராட்சியில் புதியதாக குடிநீர் குழாய் அமைக்கப்பட்டு ஒரு வருடம் ஆகிறது ஆனால் புதிய குடிநீர் குழாயில் இன்று வரை தண்ணீர் வரவில்லை. மக்கள் வண்டிகளில் விற்பனை செய்யப்படும் மினரல் வாட்டரை விலைக்கு வாங்கி குடிநீராக பயன்படுத்தி வருகின்றனர்.
மண் ரோடு
தனலட்சுமி, குடும்பத் தலைவி: ஒரு தெருவில் மட்டுமே பேவர் பிளாக் ரோடு அமைத்து உள்ளனர். எல்லா தெருக்களும் பள்ளமாகவும் மண் ரோடு ஆகவும் உள்ளது. மழைக்காலத்தில் முழங்கால் அளவிற்கு மழை நீர் தேங்கி நிற்கிறது.ரோடு வசதி செய்து தர வேண்டும்.
தேங்கும் கழிவுநீர்
முத்துச் செல்வி, குடும்பத் தலைவி: நடுத்தெரு வடக்கு தெருவில் இருந்து புதியதாக வாறுகால் கட்டியுள்ளனர்.இந்த வாறுகால் 3 அடி ஆழத்தில் கட்டப்பட்டுள்ளது.
முறையாக ஊருக்கு வெளியே சென்று கழிவுநீர் சேர வேண்டும் .ஆனால் வாறுகாலில் கழிவுநீர் செல்லாமல் குளம் போல் தேங்கி நிற்கிறது. வாறுகால் சுத்தம் செய்யவும் ஆட்கள் வருவதில்லை. கழிவுநீர் செல்ல வழி காண வேண்டும்.
சமுதாய கூடம் அவசியம்
வளர்மதி, குடும்பத் தலைவி: சமுதாயக்கூடம் கட்டித் தர வேண்டும். அச்சங்குளம் பயணிகள் நிழற்குடை தற்போது சேதமடைந்த நிலையில் உள்ளது இதை புதியதாக கட்டித் தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
உவ ர்ப்பு குடிநீர்
தங்கமாரி, குடும்பத் தலைவி: ஊராட்சியில் வீட்டிற்கு வீடு புதிதாக குடிநீர் குழாய் அமைத்து ஒரு வருடம் ஆகிறது. இன்றுவரை புதிய குடிநீர் குழாயில் தண்ணீர் வரவில்லை.
பழைய குடிநீர் குழாயில் மட்டுமே குடிநீர் வருகிறது.
குடிநீர் உவர் தண்ணியாக உள்ளதால் வண்டிகளில் விற்பனை செய்யப்படும். மினரல் வாட்டரை விலைக்கு வாங்கி குடிநீராக பயன்படுத்தி வருகிறோம்.

