/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
கோவிலில் திதி கொடுப்பதை தடுத்த செயல் அலுவலர்
/
கோவிலில் திதி கொடுப்பதை தடுத்த செயல் அலுவலர்
ADDED : ஜன 30, 2025 02:23 AM

அருப்புக்கோட்டை:அருப்புக்கோட்டை பட்டாபிராமர் கோவிலில் தை அமாவாசையை முன்னிட்டு, தர்ப்பணம் செய்ய வந்த பக்தர்களை, கோவில் செயல் அலுவலர் ராமதிலகம் தடுத்ததால், அவர்கள் பல மணி நேரம் காத்திருந்து, வேதனையுடன் தர்ப்பணம் செய்தனர்.
விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை, திருச்சுழி ரோட்டில், ஹிந்து சமய அறநிலையதுறை கட்டுப்பாட்டில் பட்டாபிராமர் கோவில் உள்ளது.
நுாற்றாண்டு பழமை வாய்ந்த இந்த கோவிலில், அமாவாசை நாட்களில், ஹிந்துக்கள் திதி கொடுப்பது வழக்கம்.
தை அமாவாசை நாளான நேற்று, முன்னோருக்கு திதி கொடுக்க, பக்தர்கள் அதிகாலையிலேயே கோவிலுக்கு வந்தனர்.
கோவிலின் செயல் அலுவலர் ராமதிலகம், அர்ச்சகரிடம், 'யாரும் திதி தர்ப்பணம் செய்யக் கூடாது' என கூறி விட்டார். திதி கொடுக்க வந்தவர்கள், செயல் அலுவலரிடம் மொபைல்போனில் பலமுறை தொடர்பு கொண்டும், அவர் மறுத்து விட்டார். இதனால் பக்தர்கள் பல மணி நேரம் காத்திருந்தனர்.
பின், செயல் அலுவலர் சம்மதத்துடன் கோவிலில் பக்தர்கள் தர்ப்பணம் செய்தனர்.
இதுகுறித்து செயல் அலுவலர் ராமதிலகத்திடம் கேட்டபோது, ''கோவிலில் திதி கொடுக்கும் வழக்கம் இருப்பது எனக்கு தெரியாது. புதிதாக திதி கொடுக்க வருகின்றனர் என நினைத்து, செய்ய வேண்டாம் என தடை செய்தேன்,'' என்றார்.

