/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
மரங்களுக்காக ரோடு வசதியை தியாகம் செய்த கிராமம்
/
மரங்களுக்காக ரோடு வசதியை தியாகம் செய்த கிராமம்
ADDED : ஜூன் 30, 2025 05:00 AM

மரங்கள் வளர்ப்பு வருங்கால சந்ததியினரின் வாழ்க்கைக்கு பாதுகாப்பாக உள்ளது. மனித உயிர் வாழ்வதற்கு பல்வேறு தேவைகளான மருந்து, உணவு உள்ளிட்டவைகளை வழங்குகின்றன. காலநிலை மாற்றங்களை கட்டுப்படுத்துகின்றன.
பெரும்பாலான மரங்கள் மருத்துவ குணங்கள் கொண்டது. சுத்தமான காற்றை தந்து மாசு இல்லாத வாழ்க்கைக்கு உதவுகிறது. இன்றைக்கு நாம் பல்வேறு இயற்கை பேரிடர்கள் வருவதற்கு பின்னால் காட்டை அழித்தது முக்கிய காரணியாக உள்ளது.
இவை ஏராளமான இயற்கை பேரழிவுகளுக்கு வழிவகுத்துள்ளது. மண்ணரிப்பு, பாலைவனம், விளைச்சல் குறைதல், வெள்ளம், தாவரங்கள், விலங்குகள் அழிவு உள்ளிட்ட தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. பகல் இரவு வரை கடுமையான வெப்பநிலை வர வழிவகுக்கிறது. அதிகரித்து வரும் வெப்பம் காலநிலை ஏற்ற இறக்கங்கள் சுற்றுச்சூழல் அமைப்புகளை தொந்தரவு செய்கின்றன.
மரங்கள் வெட்டுவதை நிறுத்தவில்லை என்றால் நமக்கான வாழ்வு இல்லை என்பதை நினைவில் கொள்ள வேண்டும். நாம் முன்னோர்கள் இவற்றையெல்லாம் உணர்ந்து மரங்கள் வளர்ப்பில் முக்கியத்துவம் செலுத்தினர். பொது இடங்கள், நீர் நிலைகள் ஆகியவற்றை சுற்றி மரங்களை நட்டு வைத்து இயற்கை சூழலை பாதுகாத்தனர்.
அந்த வகையில், அருப்புக்கோட்டை அருகே கோவிலாங்குளம் கிராமத்தில் மரங்கள் வளர்ப்பில் தலை முறை தலைமுறையாக அக்கறை செலுத்தி வளர்த்து வருகின்றனர். மதுரை - தூத்துக்குடி நான்கு வழி சாலை அருப்புக்கோட்டை சந்திப்பிலிருந்து 1 கி.மீ., தூரத்தில் உள்ள கோவிலாங்குளம் கிராம ரோட்டின் இருபுறமும் மரங்கள் வளர்க்கப்பட்டுள்ளன. 80 ஆண்டுகளை கடந்தும் இந்த மரங்கள் கிராம மக்களுக்கு குளு குளு சூழலை தருகின்றன.
வெயிலே தெரியாத அளவிற்கு பசுமை சூழலில் ரோடு உள்ளது. சில ஆண்டுகளுக்கு முன்பு ஊராட்சி மூலம் ரோட்டை அகலப்படுத்த முடிவு செய்யப்பட்டது. அதற்கு மரங்களை அகற்ற வேண்டிய சூழல் ஏற்பட்டது. ஊர் மக்கள் ஒன்று கூடி மரங்களை அகற்றுவதற்கு ஆட்சேபனை தெரிவித்தும், மரங்களை வெட்டித்தான் ரோடு போட வேண்டும் என்றால் எங்களுக்கு ரோடே வேண்டாம் என தடுத்து விட்டனர். தற்போது உள்ள ரோட்டில் எதிரே வரும் வாகனங்களுக்கு வழி விட முடியாத நிலையில் இருந்தும், மரங்களை வெட்ட கூடாது என்ற உறுதியில் உள்ளனர்.