/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
அனுமதியில்லா பட்டாசு தயாரிப்பு
/
அனுமதியில்லா பட்டாசு தயாரிப்பு
ADDED : பிப் 09, 2026 05:13 AM
வத்திராயிருப்பு: சிவகாசி சுற்றுவட்டார கிராமங்களில் அனுமதி இன்றி இயங்கிய பட்டாசு தயாரிப்பாளர்கள் தற்போது வத்திராயிருப்பு பகுதிக்கு இடம்பெயர்ந்து வருகின்றனர். இதனை தடுக்க வருவாய்த்துறை, போலீசார் கண்காணிப்பு அவசியமாகிறது.
சிவகாசி, வெம்பக்கோட்டை, திருத்தங்கல், எம்.புதுப்பட்டி உட்பட பல்வேறு கிராமங்களில் அனுமதி இல்லாத பட்டாசு தயாரிப்பில் பலர் ஈடுபடுகின்றனர். அப்போது ஏதேனும் வெடி விபத்துக்கள் ஏற்பட்டு உயிர் பலி ஏற்பட்டால் மட்டுமே போலீஸ், வருவாய் துறை அதிகாரிகளுக்கு தெரிய வருகிறது.
இதனையடுத்து மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டு தற்போது சிவகாசி சுற்றியுள்ள கிராமங்களில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. இதனால் அப்பகுதியில் இயங்கிய அனுமதியில்லாத பட்டாசு தயாரிப்பாளர்கள் வத்திராயிருப்பு தாலுகாவின் பல்வேறு மலை அடிவார கிராமங்களில் உள்ள தோப்புகள், செயல்படாத கட்டடங்களில் திருட்டுத்தனமாக பட்டாசு தயாரித்து வருகின்றனர்.
சமீபத்தில் மாவுத்து ரோட்டில் ஒரு அட்டை மில் குடோனில் பட்டாசு தயாரிப்பதை அப்பகுதி வருவாய் ஆய்வாளர் குழுவினர் கண்டுபிடித்து சீல் வைத்தனர். வத்திராயிருப்பு போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். அதற்கு முன்பு நத்தம் பட்டி, கோட்டையூர் பகுதிகளிலும் அனுமதி இல்லாத பட்டாசு தயாரிப்பாளர்கள் பிடிபட்டுள்ளனர்.
எனவே, வத்திராயிருப்பு தாலுகாவில் உள்ள அனைத்து ஊராட்சிகளுக்கு உட்பட்ட சேய் கிராமங்களில் வருவாய்த்துறையினர், போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு அனுமதியின்றி பட்டாசு தயாரிப்போர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

