ADDED : டிச 15, 2024 05:41 AM

சிவகாசி : வெம்பக்கோட்டை பகுதியில் பெய்த தொடர் மழையால் அணை நிரம்பிய நிலையில் நீர் திறந்து விடப்பட்டது.
வெம்பக்கோட்டையில் வைப்பாற்றின் குறுக்கே 1986 ல் அணை கட்டப்பட்டது. 23 அடி உயரம் கொண்ட அணையில் 5 மதகுகள் உள்ளது. இந்த அணைக்கு மேற்கு தொடர்ச்சி மலையில் இருந்து காயல்குடி, சீவலப்பேரி உள்ளிட்ட கிளை ஆறுகளில் இருந்து தண்ணீர் வருகின்றது. வெம்பக்கோட்டை, சூரார்பட்டி, கோட்டைப்பட்டி, கரிசல்குளம். சல்வார் பட்டி, ஏழாயிரம் பண்ணை, விஜய கரிசல்குளம் உட்பட 20 க்கும் மேற்பட்ட கிராமங்களில் 3300 எக்ேடர் பாசன வசதி உடையது.
இதனை நம்பி நெல், சோளம் உள்ளிட்ட பயிர்கள் பயிரிடுகின்றனர். மேலும் அணையில் இருந்து சிவகாசி மாநகராட்சிக்கு தினமும் 20 லட்சம் லிட்டர் குடிநீர் கொண்டு செல்லப்பட்டு முக்கிய குடிநீர் ஆதாரமாகவும் விளங்குகிறது. தவிர அணையை சுற்றியுள்ள கிராமப் பகுதியில் கிணற்று பாசனத்திலும் விவசாய பணிகள் நடந்து வருகின்றது.
ஒரு மாதத்திற்கு முன்பு மழை இல்லாமல் வெம்பக்கோட்டை அணையில் தண்ணீர் மட்டம் குறைந்த நிலையில் மதகில் ஷட்டர் பழுதால் இருந்த குறைந்த அளவு தண்ணீரும் வெளியேறியது. இந்நிலையில் இப்பகுதியில் தொடர்ந்து பெய்த மழையால் அணை முழுவதுமாக நிரம்பியது. அதனைத் தொடர்ந்து நீர் திறந்து விடப்பட்டது. மேலும் அணையில் சேதமடைந்த ஷட்டரை சரி செய்ய வேண்டும் என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.