ADDED : ஜன 01, 2025 07:14 AM
வத்திராயிருப்பு, : வத்திராயிருப்பு பேரூராட்சி 4வது வார்டில் சேதமடைந்த சிமென்ட் ரோடு, வாறுகால் வசதியின்றி ரோட்டில் தேங்கும் கழிவு நீரால் சுகாதாரக்கேடு, ஆண்கள் சுகாதார வளாகம், குளியல் தொட்டி இல்லாமல் சிரமம், குடிநீரை விலை கொடுத்து வாங்கும் நிலை போன்ற குறைபாடுகளுடன் அப்பகுதி மக்கள் சிரமத்தை சந்தித்து வருகின்றனர்.
வத்திராயிருப்பிலிருந்து மகாராஜபுரம் செல்லும் ரோட்டின் மேற்கு பகுதியில் ஆகாசம்பட்டி தெற்கு தெரு, நடுத்தெரு, வடக்கு தெரு, காலனி ஆகிய பகுதிகளைக் கொண்ட இந்த வார்டில் 300-க்கும் மேற்பட்ட வீடுகளும், ஆயிரத்திற்கு மேற்பட்ட மக்களும் வசித்து வருகின்றனர்.
இதில் தெற்கு தெருவில் உள்ள சிமெண்ட் ரோடு சேதம் அடைந்து காணப்படுகிறது. நடுத்தெருவில் தண்ணீர் தொட்டி சேதமடைந்து காணப்படுகிறது.
காலனியில் இருந்து வடக்கு தெரு வரை மெயின் ரோட்டில் வாறுகால் கட்டப்படாததால் கழிவு நீர் ரோட்டில் செல்கிறது. அதனை கடந்து தான் மக்கள் நடந்து செல்கின்றனர்.
சில மின்கம்பங்களில் தெரு விளக்குகள் இல்லாததால் இரவு நேரங்களில் விஷ பூச்சிகள் நடமாட்டத்தால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
பெண்களுக்கான சுகாதார வளாகம் முன்பு தூய்மையற்ற நிலை உள்ளது. மேலும் பெண்களுக்கு கூடுதல் சுகாதார வளாகம் தேவையாக உள்ளது.
பேரூராட்சி நிர்வாகத்தால் வழங்கப்படும் குடிநீர் உவர்ப்பு தன்மையுடன் காணப்படுவதால் குடிப்பதற்கு தண்ணீரை விலை கொடுத்து வாங்கும் நிலை உள்ளது.
ரேஷன் கடை கட்டடம் சேதமடைந்து காணப்படுகிறது. ஆண்களுக்கு என சுகாதார வளாகம், குளியல் தொட்டி இல்லாமல் சிரமத்தை சந்தித்து வருகின்றனர்.
குளியல் தொட்டி அவசியம்
-மாரிமுத்து, குடியிருப்பாளர்: இந்த வார்டில் ஏராளமான வீடுகள் உள்ள நிலையில் ஆண்களுக்கு என குளியல் தொட்டி இல்லாததால் சிரமத்தை சந்திக்கிறோம். எனவே, குளியல் தொட்டி கட்டி தர வேண்டும்.
தேவை சுகாதார வளாகம்
விஜயகுமார், குடியிருப்பாளர்: தெற்கு தெருவில் பல ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்ட சிமெண்ட் ரோடு சேதம் அடைந்து காணப்படுகிறது இங்கு பேவர் பிளாக் ரோடு அமைக்க வேண்டும். ஆண்களுக்கு சுகாதார வளாகம் மற்றும் குளியல் தொட்டி கட்டித் தர வேண்டும்.
-விலைக்கு வாங்கும் குடிநீர்
வீரம்மாள், குடியிருப்பாளர்: தற்போது வீடுகளுக்கு வழங்கப்படும் தண்ணீர் குடிப்பதற்கு ஏற்றதாக இல்லை. இதனால் தினமும் குடிநீரை விலை கொடுத்து வாங்குகிறோம். பெண்களுக்கு கூடுதல் சுகாதார வளாகம் கட்டித் தர வேண்டும்.
-பேரூராட்சியில் கோரிக்கை
தங்கத்தாய், வார்டு உறுப்பினர்: தெற்கு தெருவில் பேவர் பிளாக் ரோடு அமைத்தல், காலனியில் இருந்து வடக்கு தெரு வரை வாறுகால் கட்டுதல், ஆண்களுக்கும் பெண்களுக்கும் சுகாதார வளாகம் குளிரில் தொட்டி கட்டுதல் கிணற்றை சுற்றி காம்பவுண்ட் சுவர் கட்டுதல், தெரு விளக்குகள் அமைத்தல், தாமிரபரணி குடிநீர் வழங்குதல் போன்ற கோரிக்கைகளை பேரூராட்சி நிர்வாகத்தில் தெரிவித்துள்ளேன்.
இதில் நடுத்தெருவில் பேவர் பிளாக் ரோடு அமைக்கப்பட்டுள்ளது. ஆர்.ஓ. பிளான்ட் அமைக்க பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.