/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
பருவமழைக்குப் பின் 14 அடியாக உயர்ந்த கோல்வார்பட்டி அணையின் நீர்மட்டம்
/
பருவமழைக்குப் பின் 14 அடியாக உயர்ந்த கோல்வார்பட்டி அணையின் நீர்மட்டம்
பருவமழைக்குப் பின் 14 அடியாக உயர்ந்த கோல்வார்பட்டி அணையின் நீர்மட்டம்
பருவமழைக்குப் பின் 14 அடியாக உயர்ந்த கோல்வார்பட்டி அணையின் நீர்மட்டம்
ADDED : ஜன 17, 2025 04:59 AM

விருதுநகர்: விருதுநகர் சாத்துார் எல்லைப்பகுதியில் அமைந்துள்ள கோல்வார்பட்டி அணையின் நீர்மட்டம் 14 அடியாக உயர்ந்துள்ளதால் சுற்றுப்புற கிராம விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
விருதுநகர் கவுசிகா நதி சேருமிடத்தில் குல்லுார்சந்தை அணை உள்ளது. இதில் இருந்து வெளியேறும் உபரிநீரும், அதே போல் ஆனைக்குட்டத்தில்இருந்து வெளியேறும் தண்ணீரும் அர்ஜூனா நதி வாடியூர், கன்னிசேரி வழியாக கோல்வார்பட்டிக்கு வரும் நீரும் சேரும் இடத்தில் கோல்வார்பட்டி அணை கட்டப்பட்டுள்ளது. இதன் மொத்த நீர் மட்டம் உயரம் 18.04 அடி.
இந்த அணையில் கருவேல மரங்கள் பெரும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. 22 அடி உயரம் இருந்த அணை நான்கடி குறைந்ததற்கு மேவி வரும் மண்ணும் ஒரு காரணம். மேலும் பெரிய பரப்பளவு கொண்ட கோல்வார்பட்டி அணை குறுகி உள்ளது. தற்போது 14.14 அடி நீர்மட்டம் உள்ளது.
இந்த அணையில் இருந்து வெளியேறும் நீர் சிறுகுளம், நத்தத்துப்பட்டி, கே.மேட்டுப்பட்டி உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராமங்கள் பயன்பெற்று வருகின்றன. தற்போது நீர்வரத்து அதிகரித்துள்ளதால் சுற்றுப்புற விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
2020, 21 ஆண்டுகளில் இந்த அணை முற்றிலும் வறண்டு கிடந்தது. அணையின் ஒரு பகுதியில் மக்கள்வெள்ளரி விவசாயம் செய்து வந்தனர். தற்போது அணை நிரம்பி இருப்பதுஅப்பகுதி மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. இருப்பினும் அணையின் கொள்ளவு இன்னும் அதிகம். ஆனால் தற்போது சேகரமாகி இருப்பதோ குறைவு தான் என விவசாயிகள் ஆதங்கப்படுகின்றனர்.
அணையை ஆழப்படுத்தினால் தேக்கும் திறன் அதிகமாகும். தற்போது கரைகளில் கருவேல மரங்களும் அடர்ந்து காணப்படுகின்றன. ஷட்டர்களை யொட்டி விஷப்பூச்சிகள் நடமாட்டம் உள்ளது. எனவே அணையை பராமரிக்க வேண்டும். வரும் காலங்களில் ஆழப்படுத்த வேண்டும்.