/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
கோடைக்கு முன் தாமிரபரணி குடிநீர் திட்டம் முழுமையாக செயல்பாட்டுக்கு வருமா
/
கோடைக்கு முன் தாமிரபரணி குடிநீர் திட்டம் முழுமையாக செயல்பாட்டுக்கு வருமா
கோடைக்கு முன் தாமிரபரணி குடிநீர் திட்டம் முழுமையாக செயல்பாட்டுக்கு வருமா
கோடைக்கு முன் தாமிரபரணி குடிநீர் திட்டம் முழுமையாக செயல்பாட்டுக்கு வருமா
ADDED : மார் 05, 2024 05:42 AM
சிவகாசி : சிவகாசியில் கோடை காலம் துவங்கும் முன்னரே வெயில் வாட்டி வதைக்க துவங்கியுள்ளதால், குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் முன் தாமிரபரணி கூட்டுக் குடிநீர் திட்டத்தை செயல்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும் என மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
சிவகாசிக்கு மானுார் கூட்டுக் குடிநீர் திட்டம் மூலம் 34 லட்சம் லிட்டர், வெம்பக்கோட்டை அணை மூலம் 21 லட்சம் லிட்டர் மற்றும் கிணறு, போர்வெல் உள்ளிட்ட பிற உள்ளூர் நீர் ஆதாரங்கள் மூலம் 28 லட்சம் லிட்டர் என நாள் ஒன்றுக்கு 80 லட்சத்திற்கும் மேல் குடிநீர் கிடைக்கப்பெற்று வீடுகளுக்கு வினியோகிக்கப்பட்டு வருகிறது.
சிவகாசியின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் 2018 ல் ரூ.170 கோடி மதிப்பில் தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டம் துவங்கப்பட்டது. இதற்காக தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் இருந்து குழாய் பதிக்கப்பட்டு, வெம்பகோட்டையில் நீரேற்று நிலையமும், சிவகாசியில் 17 மேல்நிலை குடிநீர் தொட்டிகளும் அமைக்கப்பட்டது. இதற்காக மாநகராட்சி 25 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு 370 தெருக்களில் குழாய்கள் பதிக்கப்பட்டு, 38,670 வீடுகளுக்கு குடிநீர் இணைப்புகள் வழங்கப்பட்டது.
சிவகாசி, ராஜபாளையம் உள்ளிட்ட பகுதிகளுக்கான தாமிரபரணி கூட்டு குடிநீர் வினியோகத்தை 2023 மே ல் அமைச்சர்கள் துவங்கி வைத்தனர். இதன் மூலம் சிவகாசிக்கு தினசரி 80 லட்சம் லிட்டர் குடிநீர் கிடைக்கப்பெற்று, ஒரு நபருக்கு தினசரி 135 லிட்டர் வீதம் சுத்தமான குடிநீர் வழங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால் திட்டம் தொடங்கப்பட்டு 10 மாதங்களை கடந்த பின்னரும் தற்போது வரை முழுமையாக குடிநீர் வினியோகம் தொடங்கவில்லை.
தற்போது வெம்பக்கோட்டை அணையில் நீர் இருப்பு உள்ளதால் தட்டுப்பாடின்றி குடிநீர் கிடைத்து வருகிறது. ஆனால் கோடை காலம் தொடங்கும் முன்னரே சிவகாசி சுற்று வட்டார பகுதிகளில் வெயில் வாட்டி வதைத்து வருகிறது. இதனால் அணைகள், குளங்களில் நீர்மட்டம் குறைந்து கோடை காலத்தில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் சூழல் நிலவுகிறது.
மாநகராட்சியில் மொத்தமுள்ள 25 பிரிவுகளில் தற்போது வரை 9 பிரிவுகளில் மட்டுமே பணிகள் முழுமையாக முடிந்துள்ளது. அவற்றையும் குடிநீர் வடிகால் வாரியம், மாநகராட்சி வசம் ஒப்படைத்து இன்னமும் பணிகள் துவங்கவில்லை. எனவே கோடை காலம் தொடங்கும் முன் தாமிரபரணி கூட்டுக் குடிநீர் திட்டத்தை முழுமையாக செயல்பாட்டுக்கு கொண்டு வந்து, தட்டுப்பாடின்றி குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

