/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
வெம்பக்கோட்டையில் ஆரம்ப சுகாதார நிலையம் அமையுமா
/
வெம்பக்கோட்டையில் ஆரம்ப சுகாதார நிலையம் அமையுமா
ADDED : ஆக 01, 2025 01:54 AM
சிவகாசி: வெம்பக்கோட்டையில் அரசு மருத்துவமனை இல்லாமல் மக்கள் பெரிதும் அவதிப்படுகின்றனர். பட்டாசு ஆலைகளில் எதிர்பாராமல் ஏற்படும் விபத்தின் போது முதலுதவி சிகிச்சைக்கு கூட வழியில்லாமல் சிரமப்படுகின்றனர். எனவே இங்கு ஆரம்ப சுகாதார நிலையமாவது அமைக்க வேண்டும் என எதிர்பார்க்கின்றனர்.
வெம்பக்கோட்டை நான்கு ஆண்டுகளுக்கு முன்பு தாலுகாவாக தரம் உயர்த்தப்பட்டது. விஜய கரிசல்குளம், வனமூர்த்தி லிங்கபுரம், கோமாளிப்பட்டி, இந்திரா நகர், கண்டியாபுரம், இனாம் மீனாட்சிபுரம் உள்பட 20க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கும் மையப் பகுதியாக வெம்பக்கோட்டை உள்ளது. இப்பகுதியைச் சுற்றிலும் 200 க்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகள் இயங்கி வருகின்றன. நகராக மாறியுள்ள வெம்பக்கோட்டை தாலுகாவாக தரம் உயர்த்தப்பட்டும் இங்கு துணை சுகாதார நிலையம் மட்டுமே உள்ளது. இப்பகுதி மக்கள் சிறிய தலைவலி, காய்ச்சல் என்றால் கூட கல்லமநாயக்கன்பட்டி, ஆலங்குளம், தாயில் பட்டியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு 8 கிலோமீட்டர் துாரம் செல்ல வேண்டி உள்ளது.
வெம்பக்கோட்டையை சுற்றியுள்ள பட்டாசு ஆலைகளில் திடீரென ஏற்படும் விபத்தின் போது காயம் அடைந்தவர்களுக்கு முதலுதவி அளிக்க வழி இல்லை. காயம் அடைந்தவர்களை சிவகாசி, சாத்துாருக்கு அழைத்துச் செல்ல வேண்டி உள்ளது. இந்த கால தாமதத்தால் உயிரிழப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே வெம்பக்கோட்டையில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க வேண்டும் என ஊராட்சி சார்பில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு முதல்வருக்கு மனு அனுப்பியும் எந்த நடவடிக்கையும் இல்லை. அரசு மருத்துவமனை அமைக்கக்கூடிய தகுதி இருந்தும், இங்கு குறைந்தபட்சம் அரசு ஆரம்ப சுகாதார நிலையமாவது அமைக்க வேண்டும் என பட்டாசு தொழிலாளர்கள் எதிர்பார்க்கின்றனர்.