பள்ளியில் சுவர் இடிந்து மாணவன் பரிதாப சாவு வேன், பஸ் கண்ணாடி உடைப்பு: சாலை மறியல்
பள்ளியில் சுவர் இடிந்து மாணவன் பரிதாப சாவு வேன், பஸ் கண்ணாடி உடைப்பு: சாலை மறியல்
ADDED : அக் 07, 2011 09:42 PM

கடலூர் : பள்ளியில், சுவர் இடிந்து விழுந்து மாணவன் இறந்ததால், ஆத்திரமடைந்த கிராம மக்கள், பள்ளியை முற்றுகையிட்டு, வேன் மற்றும் பஸ் கண்ணாடியை உடைத்து, சாலை மறியலில் ஈடுபட்டனர்.
கடலூர் அடுத்த பெரிய கங்கணாங்குப்பம் புனித அந்தோணியர் மெட்ரிகுலேஷன் பள்ளியில், 800க்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர். காலாண்டுத் தேர்வு விடுமுறை முடிந்து, நேற்று பள்ளி துவங்கியது. இடைவேளை நேரத்தில், மாணவர்கள் சிறுநீர் கழிக்க, பள்ளியின் பின்புறம் உள்ள கழிப்பறைக்குச் சென்றனர்.
அப்போது, கழிப்பறையை மறைப்பதற்காக, அஸ்திவாரம் தோண்டப்படாமல், மேலோட்டமாகத் தரையில் வைக்கப்பட்ட நான்கு அடி உயரச் சுவர், இடிந்து விழுந்தது. சுவர் அருகே நின்றிருந்த கி÷ஷார்ராஜ்,6, ஹரீஷ்,8, ஆகியோர் படுகாயமடைந்தனர்.
இருவரையும், அருகில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். வழியில், கி÷ஷார்ராஜ் இறந்தார். ஹரீஷ் சிகிச்சை பெற்று வருகிறார். ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள், பள்ளியை முற்றுகையிட்டு, பள்ளி வேன், மினி பஸ் மற்றும் பள்ளி கழிப்பறைகளைத் தாக்கி சேதப்படுத்தினர். பள்ளி நிர்வாகியை கைது செய்ய வலியுறுத்தி, மதியம் 12.30 மணிக்கு, கடலூர் - புதுச்சேரி சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.
போலீசார், கிராம நிர்வாக அலுவலர் ஆகியோர், மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பள்ளி நிர்வாகத்தின் மீது, சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என, அதிகாரிகள் உறுதியளித்ததைத் தொடர்ந்து, 1.30 மணிக்கு மறியல் விலக்கிக் கொள்ளப்பட்டது.

