கல்லூரிகளில் ராகிங், ஈவ்-டீசிங்கை தடுக்க தனிப்படைகள்: கூடுதல் டி.ஜி.பி., ஜார்ஜ்
கல்லூரிகளில் ராகிங், ஈவ்-டீசிங்கை தடுக்க தனிப்படைகள்: கூடுதல் டி.ஜி.பி., ஜார்ஜ்
ADDED : ஆக 19, 2011 11:00 PM
சென்னை:''கல்லூரிகளில் ராகிங், ஈவ்-டீசிங்கை தடுக்கவும், விழிப்புணர்வு ஏற்படுத்தவும் தனிப்படைகள் அமைக்கப்பட்டு, புகார்களைத் தெரிவிக்க தனி மொபைல் எண்களும் வழங்கப்பட்டுள்ளன'' என, தமிழக சட்டம்- ஒழுங்கு கூடுதல் கமிஷனர் ஜார்ஜ் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து, தமிழக சட்டம்- ஒழுங்கு கூடுதல் டி.ஜி.பி., ஜார்ஜ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:தமிழகத்தில் உள்ள கல்லூரிகளில், மாணவர்கள் சேர்க்கை முடிந்து, 2011-12ம் கல்வியாண்டு தற்போது துவங்கியுள்ளது. கல்லூரிகளில், ராகிங் மற்றும் ஈவ்-டீசிங் பிரச்னைகளுக்குத் தீர்வு காண, முன்னுரிமை அளிக்கப்படுகிறது.
சட்டங்களை அமல்படுத்த, அனைத்து போலீஸ் கமிஷனர்கள், மாவட்ட எஸ்.பி.,க்கள், சரக டி.ஐ.ஜி.,க்கள், மண்டல ஐ.ஜி.,க்கள், கல்வி நிறுவனத் தலைவர்களுடன் ஒருங்கிணைந்து செயலாற்றி வருகின்றனர்.கல்லூரிகளில் ராகிங், ஈவ்-டீசிங்கை தடுக்க, அனைத்து நகரங்கள் மற்றும் மாவட்டங்களில் தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. அவற்றில், பெண் போலீசாரும் இருப்பர். ராகிங்கால் ஏற்படும் தீய விளைவுகள், ராகிங்கிற்கு உள்ள தடை மற்றும் அதில் ஈடுபடுபவர்களுக்கு வழங்கப்படும் தண்டனைகள் பற்றியும், மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்.தமிழக போலீசின், தீதீதீ.tணணீணிடூடிஞிஞு.ஞ்ணிதி.டிண என்ற இணையதளத்தில், ராகிங் மற்றும் ஈவ்-டீசிங் ஆகிய புகார்களைத் தெரிவிக்கலாம். புகார்கள் தெரிவிப்பவர் குறித்த விவரங்கள், வெளியிடப்பட மாட்டாது. ராகிங் புகார்களைப் பெற, போலீஸ் அதிகாரிகளுக்கு தனி மொபைல்போன் எண்கள் அளிக்கப்படுகின்றன.போலீஸ் மூலம், நடவடிக்கை மேற்கொள்ள வேண்டிய புகார்கள் இருப்பின், அவற்றை மாணவர்கள் தெரியப்படுத்த, கல்வி நிலையங்களில் புகார்ப் பெட்டிகள் வைக்கப்பட வேண்டும். பாதிக்கப்பட்ட தனி நபர்கள், மொபைல்போன் மூலம் குறுந்தகவல்களை அனுப்ப, போன் எண்களை அதிகாரிகள் கொடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

