மயக்க மருந்து உணவு கொடுத்து ரயில் பயணிகளிடம் திருட்டு: நால்வர் கைது
மயக்க மருந்து உணவு கொடுத்து ரயில் பயணிகளிடம் திருட்டு: நால்வர் கைது
ADDED : செப் 17, 2011 11:43 PM
திருப்பூர்: ரயில் பயணிகளிடம் மயக்க மருந்து கலந்த உணவுப் பொருட்களை கொடுத்து, அவர்களது உடைமைகளை திருடிய, பீகாரைச் சேர்ந்த நான்கு பேரை ரயில்வே போலீசார் கைது செய்தனர்.
ரயில்வே பாதுகாப்புப் படை இன்ஸ்பெக்டர் அனில், சப்-இன்ஸ்பெக்டர் பிரமோத்குமார், ஏட்டு மணிகண்டன் ஆகியோர், திருப்பூர் ரயில்வே ஸ்டேஷன் வளாகத்தில், நேற்று முன்தினம் இரவு, ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, சந்தேகப்படும்படியாக பிளாட்பாரத்தில் திரிந்த நால்வரை பிடித்தனர். டீ-சர்ட், ஜீன்ஸ் பேண்ட் சகிதமாக இருந்த டிப்-டாப் வாலிபர்களை ரயில்வே போலீசாரிடம் ஒப்படைத்தனர். அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில், பிடிபட்டவர்கள் ரயில் பயணிகளுக்கு மயக்க மருந்து கலந்த உணவு பொருட்களை கொடுத்து அவர்களது உடைமைகளை திருடும் கும்பல் என தெரிந்தது. அதிக பயணிகளுடன் கூட்டமாக செல்லும் ரயில் பெட்டிகளை கண்காணித்து, முன்கூட்டியே அதில் முன்பதிவு செய்து கொள்வதும், ரயிலில் பயணிக்கும் சக பயணிகளிடம் சகஜமாக பேசி பழகி, உணவுப் பண்டங்களை பகிர்ந்து கொள்வதுபோல், மயக்க மருந்து கலந்த உணவை கொடுத்து திருடியதும் தெரிந்தது. ரயில்வே போலீசார் கூறுகையில், 'கடந்த மாதம் 28ம் தேதி ஐதராபாத்தில் மயக்க மருந்து கொடுத்து திருட்டு முயற்சி; கடந்த 5ம் தேதி ரிசர்வேசன் செய்து பயணித்த குடும்பத்தினரிடம் மயக்க மருந்து கொடுத்தது என்ற இரண்டு புகார்களில், பீகார் மாநிலம், கிஷ்னேகனி பகுதியை சேர்ந்த முகமது அஸ்ஸாம் , 26, முகமது சல்மான், 25, முகமது அஸ்லாம், 25, முகமது தன்வீர், 34, ஆகிய நால்வரும் கைது செய்யப்பட்டனர்' என்றார்.