விரக்தி... வேதனை : குமுறும் இளைஞர் அமைப்பினர்... புறக்கணிப்பில் கட்சி பேதமில்லை...
விரக்தி... வேதனை : குமுறும் இளைஞர் அமைப்பினர்... புறக்கணிப்பில் கட்சி பேதமில்லை...
ADDED : அக் 05, 2011 10:49 PM

அ.தி.மு.க., எதிர்க்கட்சியாக இருந்தபோது இளம் வயதினரை தங்கள் வசம் இழுக்க, இளைஞர், இளம்பெண்கள் பாசறை உருவாக்கப்பட்டது.
'ஆட்சிக்கு வந்தால் நல்ல எதிர்காலம் உண்டு. தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்படும்,' என்ற உறுதிமொழியும் அளிக்கப்பட்டது. இதன்படி, கிளை வாரியாக பாசறை அமைக்கப்பட்டு, கட்சியில் பிரதான துணை அமைப்பாக முன்னிறுத்தப்பட்டது.
சட்டசபை தேர்தலில், எதிர்பார்த்த அளவுக்கு இளைஞர் பாசறையினருக்கு முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை. இருந்தபோதும் மனம் தளராமல், உள்ளாட்சி தேர்தலை எதிர்நோக்கி காத்திருந்தனர். ஆனால், இப்போதும் பாசறையினருக்கு ஏமாற்றம் தான். 'பழம் தின்று கொட்டை போட்ட' கரைவேட்டிகளுக்கே, மீண்டும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. மேலிட செல்வாக்கு உள்ள, கட்சி பணிக்கே வராத சிலரும் 'சீட்' பெற்றுவிட்டனர். இதனால், இளைஞர், இளம்பெண் பாசறையினர் விரக்தியில் நொந்து போயுள்ளனர். 'எதிர்க்கட்சியாக இருந்தபோது நாங்கள் தேவைப்பட்டோம். ஆனால், இப்போதும் ஏமாற்றிவிட்டனர். மொத்தத்தில் கறிவேப்பிலையாக தான் இருக்கிறோம்,' என, புலம்புகின்றனர்.
கதர் கட்சியிலும் காட்டம் : காங்கிரசுக்கு புத்துணர்ச்சி ஊட்டும் விதமாக, அதன் பொதுச் செயலாளர் ராகுல், இளைஞர் அமைப்பை பலப்படுத்தும் முயற்சி மேற்கொண்டார். சட்டசபை, லோக்சபா தொகுதிகள் வாரியாக நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். பெரிய அளவில் எதிர்பார்ப்பை உண்டாக்கிய இளைஞர் காங்., அமைப்பிலும், தற்போது குமுறல்கள் எதிரொலிக்கின்றன. சட்டசபை தேர்தலில் மாநில நிர்வாகிகள் மட்டும், கோஷ்டி 'கோட்டா' முறையில் 'சீட்' பெற்றனர். மற்றவர்களுக்கு உள்ளாட்சி தேர்தலில் வாய்ப்பு உண்டு என, வாக்குறுதி வீசப்பட்டது. ஆனால், இம்முறையும் ஏமாற்றமே.
'உள்ளாட்சி தேர்தலில் அதிக பிரதிநிதித்துவம் உண்டு என, ராகுல் கூறினார். ஆனால் அவரது வார்த்தைகளையும், மாநில தலைமை மதிக்கவில்லை. இப்போதும் புறக்கணிக்கப்பட்டுள்ளோம்,' என, வேதனைக் குரல் ஒலிக்கிறது. 'எதிர்காலம் இளைஞர் கையில்' என்பது அரசியலை பொறுத்தவரையில் வெற்று வார்த்தைகள் தானோ!

