ADDED : செப் 06, 2011 10:55 PM

சென்னை: 'பா.ஜ.,வின் சார்பில், உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட, இன்று முதல் விருப்ப விண்ணப்பம் வழங்கப்படுகிறது' என, பா.ஜ., தேர்தல் குழு தெரிவித்துள்ளது.
உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடுவது குறித்த, பா.ஜ., தேர்தல் ஆலோசனை குழுக் கூட்டம், நேற்று சென்னையில் நடந்தது.
இக்கூட்டத்தின் முடிவில், பா.ஜ., மாநிலத் தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் வெளியிட்ட அறிவிப்பு: பா.ஜ.,வின் சார்பில், உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட, இன்று துவங்கி வரும் 13ம் தேதி வரை, கட்சியினர் விருப்ப விண்ணப்பம் பெறலாம். பூர்த்தி செய்யப்பட்ட விருப்ப மனுக்கள், வரும் 14 மற்றும் 15ம் தேதிகளில் மண்டல அலுவலகங்களில், கட்சியின் மாநில நிர்வாகிகள் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் மூலம் பெறப்படும். வரும் 16ம் தேதி சென்னை மண்டலத்திற்கு உட்பட்ட, மாவட்டங்களை சேர்ந்தவர்களின் விருப்ப மனுக்கள், பரிசீலனை செய்யப்பட்டு, வேட்பாளர்கள் தேர்வு செய்யப்படுவர். இதேபோல, 17ம் தேதி, மதுரை மண்டலத்திற்கு உட்பட்ட, மாவட்டங்களை சேர்ந்தவர்களின் விருப்ப மனுக்களும், 18ம் தேதி கோவை மண்டலத்திற்குட்பட்டவர்களின் விருப்ப மனுக்களும், பரிசீலனை செய்யப்பட்டு, வேட்பாளர்கள் தேர்வு செய்யப்படுவர். உள்ளாட்சித் தேர்தல் பணிக்காக, பா.ஜ., மூலம், தமிழகத்தை கோவை, மதுரை, சென்னை என, மூன்று மண்டலங்களாக ஒருங்கிணைத்து, இம்மண்டலங்களுக்கு உட்பட்ட மாவட்டங்களை சேர்ந்தவர்களின், பூர்த்தி செய்யப்பட்ட விருப்ப மனுக்களை, அந்தந்த மண்டலங்களின் தலைமை அலுவலகங்களில் பெறுவதற்கு, ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு பொன்.ராதாகிருஷ்ணன் அறிவித்துள்ளார்.
'தினமலர்' நாளிதழுக்கு பா.ஜ., வாழ்த்து: தமிழக பா.ஜ., மாநில தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன், முன்னாள் தலைவர் இல.கணேசன் ஆகியோர் சென்னையில் நேற்று நிருபர்கள் சந்திப்பில் 'தினமலர்' நாளிதழுக்கு வாழ்த்து தெரிவித்தனர். அப்போது, ''தினமலர் நாளிதழ் மக்களுக்கு நற்சேவையாற்றி வருகிறது. அரசியலில் மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது. பல்வேறு இடர்பாடுகளை கடந்து, வெற்றிகரமாக 61ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் 'தினமலர்' நாளிதழ் பணி மென்மேலும் சிறக்க, பா.ஜ., சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்,'' என்று தெரிவித்தனர்.