ADDED : செப் 09, 2011 02:03 AM
சென்னை:'டாஸ்மாக் பணியாளர்களின் நீண்ட நாள் கோரிக்கையான,'பணிநிரந்தரம்' குறித்த அறிவிப்பை அரசு வெளியிடாதது வேதனையை அளிக்கிறது' என, தமிழக டாஸ்மாக் பணியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
தமிழக டாஸ்மாக் பணியாளர் சங்க மாநிலத் தலைவர் சவுந்தரபாண்டியன் வெளியிட்ட அறிக்கையில், 'சட்டசபையில், டாஸ்மாக் பணியாளர்களில், மேற்பார்வையாளர், விற்பனையாளர், பார் உதவியாளர்களுக்கு முறையே,500, 400, 300 ரூபாய் ஊதிய உயர்வு மற்றும் எட்டு நாட்கள் விடுமுறை என, அறிவித்தது வரவேற்கத்தக்கது.
ஆனால், நீண்ட நாள் கோரிக்கையான பணிநிரந்தரம் பற்றிய அறிவிப்பு இடம்பெறவில்லை. கடந்த ஆண்டு, 'டாஸ்மாக் பணியாளர்கள் பணி நிரந்தரம் போன்ற கோரிக்கைகள் நிறைவேறும் காலம் வெகு தொலைவில் இல்லை' என தமிழக முதல்வர் கூறியிருந்தார். மானியக் கோரிக்கையின் போது,'பணிநிரந்தரம்' பற்றிய அறிவிப்பு வரும் என, டாஸ்மாக் பணியாளர்கள் எதிர்ப்பார்த்திருந்தனர். ஆனால், அறிவிப்பு வராதது வேதனையளிக்கிறது' என்று தெரிவித்துள்ளார்.