துப்பாக்கிச் சூடு சம்பவம் : கிருஷ்ணசாமி வலியுறுத்தல்
துப்பாக்கிச் சூடு சம்பவம் : கிருஷ்ணசாமி வலியுறுத்தல்
ADDED : செப் 14, 2011 01:34 AM
மதுரை :'' பரமக்குடி, மதுரை, இளையான்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்திற்கு காரணமான போலீஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என புதிய தமிழகம் தலைவர் கிருஷ்ணசாமி வலியுறுத்தினார்.
அவர் கூறியதாவது: இமானுவேல் சேகரன் நினைவிடத்தில் 2010 ல் அஞ்சலி செலுத்திய முன்னாள் அமைச்சர் நயினார் நாகேந்திரன், அ.தி.மு.க.,ஆட்சிக்கு வந்தால் அரசு விழாவாக அறிவிக்கப்படும், என்றார். இதுகுறித்து முதல்வர் ஜெயலலிதாவிற்கு கடிதம் எழுதியும், சட்டசபையில் பேசியும், நடவடிக்கை இல்லை. இந்தாண்டு இமானுவேல் நினைவிடத்திற்கு சென்றவர்களை வாகன சோதனை என்ற பெயரில் போலீசார் ஆங்காங்கே தடுத்து, இடையூறு செய்தனர். திருநெல்வேலியில் ஒரு அமைப்பின் தலைவரை கைது செய்தபோது 15 பேர் கூடினர். உடனடியாக அவர்களை அகற்றியிருந்தால், அசம்பாவிதங்களை தடுத்திருக்கலாம். தென் மாவட்டங்களில் சமூக நல்லிணக்கம் பாதிக்கக்கூடாது என்பதில் தெளிவாக உள்ளோம். காவல்துறையினர் சிலரால் இதை சகித்துக் கொள்ள முடியவில்லை.சட்டப்படி போலீசார் செயல்படுவர் என முதல்வர் கூறினார். ராமநாதபுரம் எஸ்.பி., சட்டப்படி நடந்தாரா? சென்னை துணைக் கமிஷனர் செந்தில்வேலனை சம்பவத்திற்கு நான்கு நாட்கள் முன் ராமநாதபுரத்திற்கு அனுப்பியது ஏன்? மறியல் செய்தவர்களை பேசி கலைந்து போகச் செய்திருக்கலாம். துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர்.இச்சம்பவத்திற்கு காரணமான போலீஸ் அதிகாரிகளை சஸ்பெண்ட் செய்ய வேண்டும். நீதி விசாரணை வேண்டும். முதல்வருக்கு சரியான தகவல் கொடுக்கவில்லை. தி.மு.க.,ஆட்சியில் ஒரு ரூபாய் அரிசி, இலவச கலர் 'டிவி' வழங்கினாலும், ஜனநாயகம் தடம் புரண்டது; ஆட்சி மாறியது. அதே தவறு அ.தி.மு.க.,ஆட்சியிலும் நடக்க கூடாது என்றார். அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்களுக்கு அவர் ஆறுதல் கூறினார்.

