கூடலூர் அருகே சாலையில் விரிசல்:நிலச்சரிவு ஏற்படும் அபாயம்
கூடலூர் அருகே சாலையில் விரிசல்:நிலச்சரிவு ஏற்படும் அபாயம்
ADDED : செப் 15, 2011 11:25 PM

கூடலூர்:மாநில எல்லையில் உள்ள கூடலூர் நாடுகாணி சாலையில் ஏற்பட்ட பிளவு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், மூன்று மாநில சாலை துண்டிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.நீலகிரி மாவட்டம் கூடலூர், தேவாலா பகுதியில் கடந்த மாதம் 24ம் தேதி பெய்த கன மழையில், நாடுகாணி சாலையில் பல்வேறு இடங்களில் ஏற்பட்ட நிலச் சரிவினால், போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தொடர்ந்து பெய்த மழையில் அண்ணா நகர் பாப்சன் அருகே சாலையில் 80 மீட்டர் தூரம் பிளவு ஏற்பட்டது. நெடுஞ்சாலை துறையினர் தற்காலிகமாக சீரமைத்ததுடன், 'இப்பகுதியில் சாலை பிளவு ஏற்படுவது தடுக்கப்பட்டதாகவும், இனி ஆபத்து இல்லை' என தெரிவித்தனர். ஆனால், கேரளா புவியியல் துறையினர் ஆய்வு செய்து, 'மீண்டும் நிலச்சரிவு அபாயம் ஏற்படும்,' என தெரிவித்தனர்.
இந்நிலையில், பாப்சன் பகுதியில் சாலையில் ஏற்பட்ட பிளவு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த 29ம் தேதி சுமார் இரண்டு அடியாக இருந்த பிளவு, தற்போது சுமார் 4 அடியாக மாறியுள்ளது. சாலை நடுவிலும் வெடிப்பு ஏற்பட துவங்கியுள்ளது. 'இதை ஆய்வு செய்து தடுக்க நடவடிக்கை எடுக்க வில்லையெனில், 1961ம் ஆண்டு இதே பகுதியில் ஏற்பட்டது போன்று மிகப் பெரிய நிலச் சரிவு ஏற்பட்டு, தமிழக-கேரளா-கர்நாடக மாநிலங்களுக்கு இடையேயான போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கும் அபாயம் ஏற்படும் நிலை உள்ளது.

