ADDED : அக் 12, 2011 07:29 PM
வேலூர்:வேலூரில் பட்டா வழங்கிட, 7,000 ரூபாய் லஞ்சம் வாங்கிய துணை சர்வேயரை போலீசார் கைது செய்தனர்.
வேலூர் அடுத்த ஆர்.என்.பாளையத்தைச் சேர்ந்தவர் பால் வியாபாரி ஜோதிநாதன். இவருக்கு சொந்தமாக சதுப்பேரியில் உள்ள நிலத்துக்கு சிட்டா, பட்டா வாங்க வேலூர் தாசில்தார் அலுவலகத்தில் சர்வே பிரிவுக்கு சென்றார். அங்கிருந்த துணை சர்வேயர் பாண்டியன் (53) சிட்டா, பட்டா வழங்கிட, 10 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டார். இறுதியில் 7 ஆயிரம் ரூபாய் தருவதற்கு ஒத்துக் கொண்டார். இது குறித்து ஜோதிநாதன் வேலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீஸில் புகார் செய்தார். லஞ்ச ஒழிப்பு பிரிவு டி.எஸ்.பி., பாலசுப்பிரமணியன் உத்தரவுபடி இன்ஸ்பெக்டர் ராஜ் குமார் தலைமையில் வேலூர் தாசில்தார் அலுவலகத்துக்கு சென்று மறைந்திருந்தனர். அங்கு ஜோதிநாதன், 7,000 ரூபாயை பாண்டியனிடம் கொடுத்த போது போலீசார் கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர்.

