ADDED : ஆக 28, 2011 12:03 AM
சென்னை:'புதிய தமிழகம்' கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி எம்.எல்.ஏ.,வின் அறையில் புகுந்து, சூட்கேஸ் மற்றும் மொபைல் போனை திருடியவரை, போலீசார் தேடி வருகின்றனர்.ஒட்டப்பிடாரம் தொகுதி எம்.எல்.ஏ.,வும், 'புதிய தமிழகம்' கட்சித் தலைவருமான கிருஷ்ணசாமி, சட்டசபை நிகழ்வுகளில் கலந்து கொள்வதற்காக சென்னை, திருவல்லிக்கேணியில் உள்ள எம்.எல்.ஏ.,க்கள் விடுதியில், ஏ பிளாக்கில், 2 ஏ என்ற அறையில் தங்கியுள்ளார்.
உடன், அவரது மகன் ஷியாமும் உள்ளார். நேற்று காலை 6 மணிக்கு எழுந்த கிருஷ்ணசாமி, 6.30 மணிக்கு நடைபயிற்சி மேற்கொள்வதற்காக புறப்பட்டார். அறையில் மகன் ஷியாம் தூங்கிக் கொண்டிருந்ததால், தாழிடாமல், மூடிவிட்டு சென்றார்.நடைபயிற்சி முடித்து மீண்டும் அறைக்கு திரும்பி வந்து பார்த்த போது, அங்கிருந்த சூட்கேஸ், மொபைல் போன் ஆகியவை மாயமாகியிருந்தன. சூட்கேசில், 75 ஆயிரம் ரூபாய் பணம், அடையாள அட்டை ஆகியவை இருந்ததாக கூறப்படுகிறது. அறை திறந்திருந்ததைப் பயன்படுத்தி, மர்ம நபர் யாரோ நுழைந்து இவற்றை திருடிச் சென்றிருக்கலாம் என தெரியவந்ததை அடுத்து, திருவல்லிக்கேணி போலீசில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

