ADDED : செப் 25, 2011 06:03 AM
நாகர்கோவில்: வரும் 27ம் தேதி தொடங்க உள்ள நவராத்திரி பூஜைக்காக, சரஸ்வதிதேவி மற்றும் சுவாமி விக்ரகங்கள், யானை மீது ஊர்வலமாக புறப்பட்டு சென்றன.
பண்டைய காலத்தில், திருவிதாங்கூர் ராஜ்ஜியத்தின் தலைநகராக, கன்னியாகுமரி மாவட்டத்தில் அமைந்துள்ள பத்மனாபபுரம் விளங்கியது.
இங்குள்ள அரண்மனை வளாகத்தில், சரஸ்வதி கோவில் உள்ளது. இங்குள்ள சரஸ்வதிதேவி சிலை, கவியரசர் கம்பர் வழிபட்டது என்று வரலாறு கூறுகிறது. மன்னர்கள் காலத்தில் இக்கோவிலில் நவராத்திரி விழா கோலாகலமாக நடைபெற்றது. பின், நிர்வாக வசதிக்காக, தலைநகர் திருவனந்தபுரத்துக்கு மாற்றப்பட்டது. அதன் பின்னரும் நவராத்திரி விழா தடையின்றி நடப்பதற்காக மன்னர் உத்தரவுப்படி, சரஸ்வதிதேவி சிலை யானை மீது பவனியாக திருவனந்தபுரம் எடுத்துச் செல்லப்பட்டது.
மன்னர் ஆட்சி மறைந்த பின்னரும், அந்த மரபு மறக்கப்படாமல், இரு மாநிலங்களுக்கிடையே பல பிரச்னைகள் இருந்தாலும், இந்த விழா இருமாநிலங்களை இணைக்கும் விழாவாக நடைபெற்று வருகிறது. வரும் 27ம் தேதி நவராத்திரி பூஜை தொடங்க உள்ளதை ஒட்டி, பத்மனாபபுரத்தில் இருந்து சுவாமி பவனி புறப்பட்டது. கேரள போலீசாரின் அணிவகுப்பு மரியாதையுடன் இந்த ஊர்வலம் புறப்பட்டது. சரஸ்வதிதேவியுடன், வேளிமலை முருகன், சுசீந்திரம் முன்னுதித்த நங்கை விக்ரங்களும் இந்த பவனியில் எடுத்து செல்லப்பட்டன.
இந்த ஊர்வலத்துக்கு மன்னர் பயன்படுத்திய உடைவாள் எடுத்துச் செல்லப்பட்டது. இந்த வாளை, கேரள தேவசம்போர்டு அமைச்சர் சிவகுமார் எடுத்துக்கொடுக்க, தேவசம்போர்டு இணைஆணையர் ஞானசேகரன் பெற்றுக்கொண்டார். பின்னர் நிருபர்களிடம் பேசிய அமைச்சர் சிவக்குமார், 'இது போன்ற விழாக்கள் இருமாநிலங்களுக்கிடையிலான உறவை மேலும் வலுப்படுத்தும்' என்று கூறினார்.நாளை திருவனந்தபுரம் செல்லும் பவனியை, மன்னர் உத்திராடம் திருநாள் மார்த்தாண்டவர்மா வரவேற்று அழைத்துச் செல்வார். 27ம் தேதி நவராத்திரி பூஜை தொடங்குகிறது.

