ADDED : செப் 29, 2011 10:05 PM
சென்னை : 'பாதுகாப்பு அம்சங்கள் குறித்து உயர்மட்டக் குழு எடுக்கும் முடிவை உடனடியாக அரசு அமல்படுத்த வேண்டும்' என, சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
ஐகோர்ட் பாதுகாப்பு குறித்து, வழக்கறிஞர் கார்த்திகேயன் என்பவர் மனு தாக்கல் செய்தார். இம்மனு, தலைமை நீதிபதி இக்பால், நீதிபதி சிவஞானம் அடங்கிய, 'முதல் பெஞ்ச்' முன் விசாரணைக்கு வந்தது. தமிழக அரசின் கடிதத்தை அட்வகேட்-ஜெனரல் தாக்கல் செய்தார். இதையடுத்து, 'முதல் பெஞ்ச்' பிறப்பித்த உத்தரவு:
பாதுகாப்பு குறித்து உயர்மட்டக் குழு கூடியதாகவும், அதில் ஐகோர்ட்டுக்கான முழுமையான பாதுகாப்பு ஏற்பாடுகளை அமல்படுத்த அனைவரும் ஒப்புக் கொண்டதாகவும் தெரிவிக்கப்பட்டது. நீதிபதிகள் தெரிவித்த பரிந்துரைகளை உள்துறை முதன்மைச் செயலர், பொதுப்பணித் துறைச் செயலர் ஒப்புக் கொண்டுள்ளனர்.
இவ்வழக்கு விசாரணை, அக்., 18 ம் தேதிக்கு தள்ளிவைக்கப்படுகிறது. குழு எடுக்கும் முடிவை, அரசு உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்பதை சொல்ல தேவையில்லை. பாதுகாப்பு ஏற்பாடுகள் பற்றி, தமிழ் மற்றும் ஆங்கில பத்திரிகையில் அரசு விரிவாக வெளியிட வேண்டும். இவ்வாறு, 'முதல் பெஞ்ச்' உத்தரவிட்டது.