ADDED : அக் 04, 2011 11:57 AM
பொள்ளாச்சி: சுயமரியாதையை இழந்து சட்டசபை தேர்தலில் போட்டியிட விரும்பவில்லை.
எனவே சட்டசபை தேர்தலை புறக்கணித்ததாக வைகோ பேசினார். பொள்ளாச்சி நகராட்சியில் ம.தி.மு.க., சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து வைகோ பேசியதாவது: “தமிழகத்தை இதுவரை ஆண்ட மற்றும் ஆண்டுவரும் கட்சிகள் பெரும் நிர்வாக குளறுபடிகளில் ஈடுபட்டுள்ளன. இதன் காரணமாக உள்ளாட்சி அமைப்புகளில் ஊழல் மலிந்து விட்டது. எவ்வித அடிப்படை வசதிகளும் இல்லை. கடந்த சட்டசபை தேர்தலுக்கு முன், 5 ஆண்டுகளாக அ.தி.மு.க.,வுக்கு துணை நின்றோம். ஆனால் சுயமரியாதையை இழந்து சட்டசபை தேர்தலில் போட்டியிட விரும்பவில்லை. எனவே சட்டசபை தேர்தலை புறக்கணித்தோம். எங்களின் இந்த முடிவை 75 சதவீதமானோர் வரவேற்றுள்ளனர். அரசியலுக்கு அப்பாற்பட்டு, இணையதளம் மூலமாக எங்களுக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். சட்டசபை தேர்தலில் போட்டியிடாவிட்டாலும், மக்கள் பணியில், மக்களின் தேவைகளுக்காக ம.தி.மு.க., தொடர்ந்து போராடி வருகிறது. ஸ்டெர்லைட் போன்ற விவகாரங்களை இதற்கு உதாரணமாக சொல்லலாம். கூடங்குளம் பிரச்னையை பொறுத்தவரையில், கடந்த 1988ம் ஆண்டு அப்போதைய பிரதமர் ராஜிவ் இந்திய ரஷ்ய கூட்டுமுயற்சி காரணமாக அணுஉலை அமைக்க முயன்ற போது, அதை நான் கடுமையாக எதிர்த்தேன். இது பார்லி., குறிப்பிலும் இடம்பெற்றது. எங்களின் வேட்பாளர்கள் பணபலம் இல்லாதவர்கள். எனினும் மக்கள் பலத்தை முன்வைத்து இத்தேர்தலில் போட்டியிடுகின்றனர். கோவை மாவட்ட மக்களின் முக்கிய வாழ்வாதாரமான பரம்பிக்குளம் அணையை கேரள அரசு பறிக்க முயல்வது, பாம்பாற்றில் அணை கட்ட முயல்வது உள்ளிட்ட விஷயங்களில் ம.தி.மு.க., தொடர்ந்து தன் எதிர்ப்பை வெளிப்படுத்தும். சேலம் கோட்டம் உருவான போது, பாலக்காடு கோட்டத்திற்கு கொடுக்கப்பட்ட தமிழக பகுதிகள் மீண்டும் திரும்ப பெறப்படும்” என்றும் பேசினார்.

