அத்திக்கடவு திட்டம் பா.ஜ., உண்ணாவிரதத்தை தள்ளி வைக்க அமைச்சர் முத்துசாமி கோரிக்கை
அத்திக்கடவு திட்டம் பா.ஜ., உண்ணாவிரதத்தை தள்ளி வைக்க அமைச்சர் முத்துசாமி கோரிக்கை
ADDED : ஆக 05, 2024 01:09 AM

ஈரோடு:அத்திக்கடவு - அவிநாசி திட்டப் பணிகள் குறித்து, அலுவலர்களுடனான ஆய்வு கூட்டம், ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது.
வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சர் முத்துசாமி தலைமை வகித்தார். பின், அத்திக்கடவு - அவிநாசி திட்டத்துக்கு நிலம் கொடுத்தவர்களுடனும் ஆலோசனை கூட்டம் நடந்தது.
அமைச்சர் முத்துசாமி கூறியதாவது:
அத்திக்கடவு - அவிநாசி திட்டம் தாமதமாவதற்கு அரசு காரணம் என்ற தகவல் வெளியாகிறது. இதற்கு அரசு காரணமல்ல. இத்திட்டத்தில் ஆறு பம்பிங் ஸ்டேஷன் உள்ள நிலையில், முதல் மூன்று பம்பிங் ஸ்டேஷன் இடையேயான நிலம் கையகப்படுத்தப்படாமல் இருந்தது.
விவசாயிகளிடம் பேசி நிலத்தை பயன்படுத்தவும், கையகப்படுத்தவும் சம்மதிக்க செய்தோம். பணி நடக்க தி.மு.க., அரசு தான் காரணம். காவிரி அல்லது பவானி ஆற்றில் இருந்து நீர் எடுக்கலாம் என்று கூறுகின்றனர்; 1.5 டி.எம்.சி., நீரை எடுப்பது தான் முறை.
கோரிக்கை நியாயமானது
ஆனால், விதிகளின் படிமட்டுமே நீரை எடுக்க முடியும். தற்போது தண்ணீர் குறைவாக இருக்கிறது. 1,045 குளங்களுக்கு தண்ணீர் செல்ல தொடர்ந்து சோதனை ஓட்டம் நடக்கிறது.
கீழ்பவானி வாய்க்காலில் ஆக., 15ல் தண்ணீர் திறக்கும் நிலையில், அதன்பின், 10 முதல், 15 நாட்களில் கசிவு நீர் கிடைக்கும். ஆறு பம்பிங் ஸ்டேஷன்களையும் ஒரே நேரத்தில் இயக்கினால் தான், அனைத்து குளங்களுக்கும் நீர் போய் சேரும். 70 நாட்கள் அதை தொடர்ச்சியாக எடுக்க வேண்டும். இது தான் திட்டம்.
திட்டத்துக்கு, 1,416 விவசாயிகள் நிலம் கொடுத்துள்ளனர். இவர்களில், 100 விவசாயிகளுக்கு மட்டும் நிலத்துக்கான இழப்பீட்டு தொகை தர வேண்டும். இத்திட்டத்தில், 1,045 குளங்களுக்கு மேல் சேர்க்க முடியாது. கூடுதல் குளங்களை சேர்க்க தனி திட்டம் தான் போட வேண்டும்.
கீழ்பவானி வாய்க்காலில் பக்கவாட்டு சுவர் கட்டுவதால், கசிவு நீர் கிடைப்பதில் எந்த பிரச்னையும் இல்லை. நீதிமன்ற வழிகாட்டுதல்படி பணி நடக்கிறது.
பா.ஜ.,வினர் ஏற்கனவேஇத்திட்டச் செயல்பாட்டுக்காக போராட்டம் நடத்தப்படும் என்று அறிவித்திருந்தனர். அப்போது, அவர்களிடம் இதுபற்றி பேசி இருக்கிறோம். அவர்கள் இப்பிரச்னையில் அரசியல் செய்கின்றனர் என்று கூற முடியாது. அவர்கள் கோரிக்கை நியாயமானது.
ஒத்துழைப்பு
அவர்களுக்கு திட்டத்தில் உள்ள பிரச்னை குறித்து விளக்கமளிக்க தயாராக உள்ளோம். அரசுக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.
பா.ஜ.,வினர் அறிவித்துள்ள உண்ணாவிரதப் போராட்டத்தை தள்ளி வைக்க வேண்டும். கசிவு நீர் வந்த பிறகும் திட்டம் தாமதமானால், நானும் கூட அவர்களுடன் இருப்பேன். பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலைக்கு, திட்டம் குறித்து நிலைமையை முழுமையாக யாரும் சொல்லவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.