பி.சி., - எம்.பி.சி., பட்டியல் அடிப்படையில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும்: சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றம்
பி.சி., - எம்.பி.சி., பட்டியல் அடிப்படையில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும்: சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றம்
ADDED : செப் 09, 2026 04:24 AM

ச ட்டசபையில் நேற்று, பிற்படுத்தப்பட்டோர் நலத் துறை அமைச்சர் சம்பத்குமார் கொண்டு வந்த அரசின் தனி தீர்மானம்:
இந்திய சுதந்திரத்திற்குப் பின் நடந்த மக்கள் தொகை கணக்கெடுப்புகளில், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் ஜாதிவாரி விபரங்கள் சேகரிக்கப்படவில்லை.
அனைத்து தரப்பினருக்குமான சமூக நீதியை உறுதி செய்ய, ஜாதிவாரியான மக்கள்தொகை விபரங்கள் தேவை.
அதற்கு, அரசமைப்பு சட்டத்தின்படி, மத்திய - மாநில அரசுகளால் முறைப்படி அறிவிக்கப்பட்டுள்ள , பி.சி., எனப்படும் பிற்படுத்தப்பட்டோர், எம்.பி.சி., எனப்படும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் ஜாதி பட்டியல்களின் அடிப்படையில், துல்லியமான விபரங்களைப் பெறுவது அவசியம்.
வரும் 2027ம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின், இரண்டாம் கட்ட பணியில், பட்டியலின, பழங்குடியினருக்கு பின்பற்றுவதுபோல, இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் ஜாதி விபரங்களை சேகரிக்கும்போது, பி.சி., - எம்.பி.சி., சீர்மரபினர் பட்டியலில் உள்ள, ஜாதிகளின் பெயர்களை, மக்கள்தொகை கணக்கெடுப்பு செயலியில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.
தெளிவற்ற தன்மையை உருவாக்கும், திறந்தவெளி பதிவு முறையை முழுமையாக கைவிட வேண்டும் என, மத்திய அரசை, தமிழக சட்டசபை ஒருமனதாக வலியுறுத்துகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
அமைச்சர்கள் ஆதவ் அர்ஜுனா, வன்னி அரசு, ஷாஜகான், ராஜேஷ்குமார், அ.தி.மு.க., - சி.வி.சண்முகம், ராஜேந்திரன், பா.ம.க., - கணேஷ்குமார், இந்திய கம்யூனிஸ்ட் - மாரிமுத்து, மார்க்சிஸ்ட் - செல்லசாமி ஆகியோர் தீர்மானத்தை ஆதரித்துப் பேசினர்.
பா.ஜ., - போஜராஜன் பேசும்போது, ''அமைச்சரின் தீர்மானத்தை வரவேற்கிறோம். ஆனால், அமைச்சர் வன்னி அரசு உள்ளிட்டோர், மத்திய அரசை குறை கூறி பேச வேண்டிய அவசியம் இல்லை.
''பட்டியலின, பழங்குடியின, பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு ஆதரவான பா.ஜ.,வுக்கு எதிராக பேசியதை சபைக் குறிப்பிலிருந்து நீக்க வேண்டும்,'' என்றார்.
அதைத் தொடர்ந்து இந்த தீர்மானம், குரல் ஓட்டெடுப்பு வாயிலாக நிறைவேற்றப்பட்டது.
