பெண்ணை ஏமாற்றி 7 ஏக்கர் நிலம் அபகரிப்பு:தி.மு.க., மாஜி எம்.எல்.ஏ., உட்பட 7 பேர் மீது வழக்கு
பெண்ணை ஏமாற்றி 7 ஏக்கர் நிலம் அபகரிப்பு:தி.மு.க., மாஜி எம்.எல்.ஏ., உட்பட 7 பேர் மீது வழக்கு
ADDED : ஜூலை 15, 2011 04:31 AM
நாமக்கல்:ப.வேலூர் அருகே, பெண்ணை ஏமாற்றி, ஏழு ஏக்கர் விளை நிலத்தை அபகரித்த வழக்கில், தி.மு.க.,வைச் சேர்ந்த ராசிபுரம் முன்னாள் எம்.எல்.ஏ., மற்றும் அவரது மகன், சார்பதிவாளர் உட்பட, ஏழு பேர் மீது, மாவட்ட குற்றவியல் போலீசார், வழக்கு பதிவு செய்து, விசாரிக்கின்றனர்.நாமக்கல் மாவட்டம், ப.வேலூர் அருகே, மரவபாளையத்தைச் சேர்ந்தவர் சரஸ்வதி, 73.
இவருக்கு அதே பகுதியில், ஏழு ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. சரஸ்வதியின் இளைய சகோதரர் சந்திரசேகர், ஏழு ஏக்கர் நிலம் மற்றும் அவருக்கு சொந்தமான நிலத்தை, தி.மு.க.,வைச் சேர்ந்த ராசிபுரம் முன்னாள் எம்.எல்.ஏ., ராமசாமியின் மகன் முத்துவேலுக்கு, 2010ல் விற்பனை செய்துள்ளார்.அதனால், நிலத்தை காலி செய்யும்படி சரஸ்வதியை, ராமசாமி, அவரது மகன் முத்துவேல் ஆகியோர் மிரட்டியதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக, மாவட்ட எஸ்.பி., அலுவலகத்தில் சரஸ்வதி புகார் செய்தார்.புகாரின் பேரில், போலீசார் விசாரணை நடத்தினர். அதில், முத்துவேல் உதவியுடன், சந்திரசேகர், போலி ஆவணம் தயார் செய்து, ஏழு ஏக்கர் நிலத்தை விற்பனை செய்தது தெரிந்தது. இருப்பினும், வழக்கு பதிவு செய்யாமல் இருந்துள்ளனர்.இந்நிலையில், நில மோசடி தொடர்பாக விசாரணை நடத்தும் தனிப் பிரிவில் சரஸ்வதி அளித்த புகாரின் பேரில், சந்திரசேகர், அவரது மனைவி சுமதி, மகன்கள் முரளிசங்கர், சந்தோஷ், ராசிபுரம் முன்னாள் எம்.எல்.ஏ., ராமசாமி, அவரது மகன் முத்துவேல், அப்போதைய பரமத்தி சார்பதிவாளர் லட்சுமணன் ஆகிய ஏழு பேர் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.