தோல்விகளில் இருந்து பா.ஜ., பாடம் கற்க வேண்டும்: ஸ்டாலின்
தோல்விகளில் இருந்து பா.ஜ., பாடம் கற்க வேண்டும்: ஸ்டாலின்
ADDED : ஜூலை 13, 2024 08:31 PM
சென்னை:'நாங்கள் எங்களது சாதனை பயணத்தையும், வெற்றி பயணத்தையும் தொடர்கிறோம். தோல்விகளில் இருந்து பா.ஜ., பாடம் கற்றுக் கொள்ள வேண்டும்' என, முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
அவரது அறிக்கை:
லோக்சபா தேர்தலில், புதுச்சேரி உள்ளிட்ட தமிழகத்தின் 40 தொகுதிகளிலும் நுாறு சதவீத வெற்றியை, தி.மு.க., தலைமையிலான 'இண்டியா' கூட்டணி பெற்றது. அ.தி.மு.க., கூட்டணி படுதோல்வி அடைந்தது. பா.ஜ., கூட்டணி பாதாளத்தில் விழுந்தது.
அதைத் தொடர்ந்து, விக்கிரவாண்டி இடைத்தேர்தலை எதிர்கொண்டோம். லோக்சபா தேர்தல் படுதோல்வியால் எழ முடியாமல் இருந்த அ.தி.மு.க., அதே படுதோல்வியை சந்திக்க போகிறோம் என்பதை உணர்ந்து, போட்டியில் இருந்து பின்வாங்கியது.
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில், பா.ஜ., தன் அணியில் இருக்கும் பா.ம.க.,வை களம் இறக்கியது. இடைத்தேர்தலிலே நிற்பது இல்லை என்று வைராக்கியமாக இருந்த பா.ம.க., போட்டியிட முன்வந்த மர்மம் இன்னமும் விலகவில்லை.
தோற்கப் போகிறோம் என்று தெரிந்தே போட்டியிட்டது பா.ஜ., அணி. அவதுாறுகளையும், பொய்களையும், தி.மு.க., மீதும், குறிப்பாக என் மீதும் விதைத்து, மிகக் கீழ்த்தரமான பிரசாரத்தை முன் வைத்தது. பொய் வேஷக்காரர்களின் பகல் வேஷ பிரசாரத்தை, மக்கள் மதிக்கவே இல்லை. இந்த வீணர்களை விக்கிரவாண்டி மக்கள் விரட்டி அடித்து விட்டனர்.
தமிழகத்தின் வளர்ச்சிக்கும், மக்களின் முன்னேற்றத்துக்கும், தி.மு.க., என்றும் எப்போதும் தேவை என்பதை, இடைத்தேர்தல் வழியாக எடை போட்டு சொன்ன வாக்காளர்களுக்கு நன்றி.
நேரம் காலம் பார்க்காமல் உழைத்த உழைப்புக்கும், தினமும் உருவாக்கி கொடுத்த திட்டங்களுக்கும், மக்கள் தெரிவித்த நன்றியின் அடையாளமாகவே, இந்த வெற்றியை பார்க்கிறேன்.
இந்தியா முழுமைக்கும், பல்வேறு மாநிலங்களில் நடந்த, 13 சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில், 'இண்டியா' கூட்டணி கட்சிகள், 11 இடங்களில் முன்னணியில் இருக்கின்றன. பா.ஜ., தோல்வியை தழுவி இருக்கிறது.
லோக்சபா தேர்தலில், ஆட்சி அமைக்கும் பெரும்பான்மையை பெறாத பா.ஜ., சில கட்சிகளின் தயவால், மத்தியில் ஆட்சி அமைத்துள்ளது. அத்தகைய தோல்வி முகமே, இந்த இடைத்தேர்தலிலும் தொடர்கிறது. தோல்விகளில் இருந்து பா.ஜ., பாடம் கற்றுக் கொள்ள வேண்டும். மாநில உணர்வுகளை மதிக்காமல், ஆட்சியையும், கட்சியையும் நடத்த முடியாது என்பதை, பா.ஜ., இனியாவது உணர வேண்டும்.
நாங்கள் எங்களது சாதனை பயணத்தையும், வெற்றிப் பயணத்தையும் தொடர்கிறோம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

