ADDED : ஜூன் 28, 2024 09:54 PM
சென்னை:ஜாதி மறுப்பு திருணம் செய்த பெண், தனக்கும் கணவருக்கும் பாதுகாப்பு வழங்க உத்தரவிடக்கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
திருநெல்வேலி மாவட்டம் பெருமாள்புரத்தைச் சேர்ந்த உதயதாட்சாயினி, 23 மற்றும் பாளையங்கோட்டையைச் சேர்ந்த மதன்குமார், 28 ஆகியோர், இம்மாதம் ஜாதி மறுப்பு திருமணம் செய்து கொண்டனர். இவர்களின் திருமணத்துக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவு தெரிவித்தது.
இதையறிந்த பெண் வீட்டார், நெல்லையில் ரெட்டியார்பட்டி சாலையில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தை சேதப்படுத்தினர். இந்த சம்பவம் குறித்து, பெருமாள்புரம் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
இந்நிலையில், சென்னை உயர் நீதிமன்றத்தில் உதயதாட்சாயினி தாக்கல் செய்துள்ள மனு:
வெவ்வேறு ஜாதியைச் சேர்ந்த எங்களின் திருமணத்துக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர். அதை மீறி திருமணம் செய்து, பாதுகாப்புக்காக மார்க்சிஸ்ட் கம்யூ., அலுவலகத்தில் தஞ்சம் அடைந்தோம். அங்கு வந்த உறவினர்கள், அலுவலகத்தை சேதப்படுத்தினர்.
பெற்றோர் மற்றும் வெள்ளாளர் முன்னேற்றக் கழக மாநில இளைஞரணி செயலர் ஆகியோரிடம் இருந்து, எவ்வித அச்சுறுத்தலும் இன்றி அமைதியாக வாழ, போலீசார் பாதுகாப்பு வழங்க வேண்டும். இதுதொடர்பாக, கடந்த 25ல் அளித்த மனு மீது உரிய நடவடிக்கை எடுக்க, டி.ஜி.பி., உள்துறை செயலர் உள்ளிட்டோருக்கு உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

