வாடகை வாகன பயணியர் பாதுகாப்புக்கு க்யூ.ஆர்., கோடு: சென்னை மாநகர காவல்துறை அறிமுகம்
வாடகை வாகன பயணியர் பாதுகாப்புக்கு க்யூ.ஆர்., கோடு: சென்னை மாநகர காவல்துறை அறிமுகம்
ADDED : மார் 08, 2025 12:23 AM

சென்னை: ஆட்டோ, ேஷர் ஆட்டோ உள்ளிட்ட வாடகை வாகனங்களில் பயணிப்போரின் பாதுகாப்பை உறுதி செய்யவும், அவர்களுக்கு போலீசாரின் உடனடி உதவி கிடைக்கவும், சென்னை மாநகர காவல் துறை, க்யூ.ஆர்., கோடு ஒட்டும் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.
இத்திட்டத்தை, சென்னை தலைமைச் செயலகத்தில், முதல்வர் ஸ்டாலின் நேற்று துவக்கி வைத்தார்.
88,859 ஆட்டோ
திட்டம் குறித்து, சென்னை போலீஸ் கமிஷனர் அருண் கூறியதாவது:
சென்னை மாநகர காவல் துறை, முதற்கட்டமாக, வாடகை வாகன பயணியரின் பாதுகாப்பை உறுதி செய்யவும், அவர்களுக்கு உடனடியாக போலீசாரின் உதவி கிடைக்கவும், 88,859 ஆட்டோக்கள், ேஷர் ஆட்டோ மற்றும் கார்களுக்கு தனித்தனியாக, க்யூ.ஆர்., கோடு உருவாக்கி உள்ளது.
இந்த க்யூ.ஆர்., கோடு, வாடகை வாகன ஓட்டுநர் இருக்கைக்குப் பின் பகுதியில், பயணியரின் பார்வைக்கு எளிதில் தெரியும் படியும், கிழிக்க முடியாதபடியும் ஒட்டப்படும்.
இதை பயணியர், 'ஸ்மார்ட்' போன்களில் 'ஸ்கேன்' செய்து கொள்ளலாம். ஏதேனும் ஆபத்து மற்றும் போலீசாரின் உதவி தேவைப்பட்டால், க்யூ.ஆர்., கோடு ஸ்கேன் செய்த பின், அதில் தெரியும் எஸ்.ஓ.எஸ்., என்ற இடத்தை அழுத்தினால் போதும்.
சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில், பிரத்யேகமாக உருவாக்கப்பட்டுள்ள, காவல் கட்டுப்பாட்டு அறைக்கு குறுஞ்செய்தி சென்றுவிடும்.
அதில், அந்த வாடகை வாகனம் எந்த இடத்தில் சென்று கொண்டு இருக்கிறது; வாகனத்தின் பதிவு எண், அதன் உரிமையாளர், ஓட்டுநர் பெயர், முகவரி, மொபைல் போன் எண்கள், பயணியின் மொபைல் போன் எண்கள் உள்ளிட்ட விபரங்கள் பெரிய திரையில் தெரிந்துவிடும்.
சிக்கல் இல்லை
எஸ்.ஓ.எஸ்., என்ற இடத்தை தொட்டு குறுஞ்செய்தி அனுப்பும் வசதியுடன், '112' என்ற எண்கள் வாயிலாக, காவல் கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொள்ளும் வசதியும் உள்ளது.
குறுஞ்செய்தி கிடைத்த அடுத்த நொடியே, கட்டுப்பாட்டு அறை அதிகாரிகள், சம்பந்தப்பட்ட வாகனம் எந்த இடத்தில் செல்கிறது; அதன் அருகில் ரோந்து பணியில் ஈடுபட்டு வரும் போலீசாரை அனுப்பி, பாதிப்பில் உள்ள பயணிக்கு உதவி கிடைக்கச் செய்வர்.
இந்த திட்டத்திற்கு, 'ஓலா, ஊபர், ரேபிட்டோ' உள்ளிட்ட வாகன சேவை நிறுவனங்களும் முழு ஒத்துழைப்பு அளித்துள்ளன.
இதனால், இந்நிறுவனங்களுடன் இணைக்கப்பட்டுள்ள வாகனங்களில் பயணிப்போரின் வேண்டுகோளின்படி, அவர்களின் பயண நிகழ்நேரத்தையும் போலீசாரால் கண்காணிக்க முடியும். இரவு நேர பயணியர் பாதுகாப்பிற்கும், சென்னை மாநகரில் தடையற்ற இணைய சேவை இருப்பதால், க்யூ.ஆர்., கோடு ஸ்கேன் செய்வதில் சிக்கல் இருக்காது.
இவ்வாறு அவர் கூறினார்.