'பழனிசாமிக்கு பதில் தனபால் முதல்வர் தலித் எம்.எல்.ஏ.,க்களே ஏற்கவில்லை'
'பழனிசாமிக்கு பதில் தனபால் முதல்வர் தலித் எம்.எல்.ஏ.,க்களே ஏற்கவில்லை'
ADDED : ஆக 30, 2024 08:55 PM
புதுக்கோட்டை:புதுக்கோட்டையில், நேற்று நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட சசிகலாவின் சகோதரர் திவாகரன், செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:
பழனிசாமியை முதல்வராக தேர்ந்தெடுத்த பின், தினகரனுடன், பழனிசாமிக்கு மோதல் போக்கு ஏற்பட்டது. இதற்கு தீர்வு காண, தனபாலை முதல்வராக ஆக்கலாம் என்று கூறி, சசிகலாவிடம் முன்மொழிந்தேன். அதற்கு, திருமாவளவன் உள்ளிட்டோர் வரவேற்றனர். ஆனால், அ.தி.மு.க.,வில் இருந்த, 35 தலித் எம்.எல்.ஏ.,க்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
மக்கள் நலத் திட்டங்களை தி.மு.க., அரசு சரியாக செயல்படுத்தி வருகிறது. இருப்பினும், சட்டம் - ஒழுங்கு பிரச்னையில், கவனம் செலுத்த வேண்டும். தி.மு.க., மத்திய அரசுடன் மோதல் போக்கை கடைப்பிடித்து வருவதால் தான், தமிழகத்துக்கு போதுமான அளவுக்கு நிதிகள் வருவது இல்லை. இதனால் பாதிக்கப்படுவது மக்கள் தான்.
மத்திய அரசு புதிய கல்வித் திட்டத்தின் கீழ், ஸ்ரீ பள்ளிகளை நிறுவச் சொல்கிறது. ஆனால், மாநில அரசோ புதிய கல்விக் கொள்கையை காட்டி அதை மறுக்கிறது. இவர்களுக்கு இடையில் மாட்டி, சிக்கி தவிப்பது என்னை போன்ற கல்வியாளர்களும், மாணவ, மாணவியரும் தான்.
மத்திய அரசு, கல்வியை மாநில பட்டியலுக்கு கொண்டு வர வேண்டும் என்பது தான், என்னைப் போன்றவர்களின் கோரிக்கையாக உள்ளது.
பழனிச்சாமிக்கு அட்வைஸ் செய்கின்ற அளவுக்கு, நான் பெரிய ஆள் இல்லை. அவர், என்னை விட சீனியர்; இருந்தாலும், பழனிச்சாமி உள்ளடக்கியே அ.தி.மு.க., ஒருங்கிணைப்பு நடக்க வேண்டும்.
தமிழக அரசியல் ஒரு காலத்தில் நன்றாக இருந்தது. தற்போது, தனிமனித தரமற்ற விமர்சனங்கள் செய்யப்படுகிறது. தேர்தல் நேரத்தில் மட்டும் அரசியல் செய்ய வேண்டும். மற்ற நேரங்களில் அனைவரிடம் சுமூகமாக இருக்க வேண்டும்,
இவ்வாறு அவர் கூறினார்.