ADDED : செப் 07, 2024 10:14 PM
சென்னை:சென்னை, அசோக் நகர் அரசுப் பள்ளியில் முற் பிறவி, அடுத்த பிறவி குறித்தெல்லாம் விழிப்புணர்வு சொற்பொழிவு நடத்திய சொற்பொழிவாளர் மகா விஷ்ணுவை தமிழக போலீசார் கைது செய்த விதம் விமர்சனத்துக்குள்ளாகி உள்ளது.
ஆஸ்திரேலியாவில் இருந்து விமானம் வாயிலாக, நேற்று காலை சென்னை வந்த அவரை பிடிக்க விமான நிலையத்தில் 200க்கும் அதிகமான போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். விமான நிலைய வாயிலுக்கு வந்த அவரை, போலீசார் பிடித்து விசாரணைக்காக அழைத்துச் சென்று, பின் கைது செய்தனர்.
மகா விஷ்ணு நண்பர்கள் கூறியதாவது:
அசோக் நகர் பள்ளியில் பேசிய மகா விஷ்ணுவின் பேச்சு சர்ச்சையான போது அவர், ஆஸ்திரேலியாவில் இருந்தார். இருந்தபோதும், சென்னை திரும்பி வந்து, போலீசாருக்கு உரிய விளக்கம் அளிப்பதோடு, விசாரணைக்கும் ஒத்துழைப்பேன் என்று கூறி வீடியோ வெளியிட்டார். சொன்னபடியே சென்னை திரும்பினார். ஆனால், அவரை தீவிரவாதியை கைது செய்வது போல, 200 போலீசாரை வைத்து கைது செய்திருப்பது நல்ல போக்கு அல்ல.
இவ்வாறு அவர்கள் கூறினர்.