ADDED : பிப் 25, 2025 08:17 PM
ராணிப்பேட்டை:''கட்சியில் இருந்து விலகி செல்வோரை காலில் விழுந்து தக்க வைக்க வேண்டிய அவசியமில்லை,'' என, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறினார்.
ராணிப்பேட்டை மாவட்டம், திமிரியில் சீமான் அளித்த பேட்டி:
தமிழகத்தில் நடக்கும் பாலியல் சம்பவங்களுக்கு, 'அப்பா ஸ்டாலின்' தான் பதில் கூற வேண்டும். புதிய கல்வி கொள்கையை, தமிழக அரசு ஏற்று கொண்டது. ஆனால், மும்மொழி கொள்கை தீவிரமாகும்போது அதை, தி.மு.க., எதிர்ப்பதுபோல் நாடகமாடுகிறது. புதிய கல்விக்கொள்கையை ஏற்காததால், கல்வித் துறைக்கு நிதி வழங்கவில்லை என்பது சரியல்ல. நிதியை கூட கேட்டு பெற முடியாமல், 40 லோக்சபா எம்.பி.,க்களை வைத்து கொண்டு என்ன பயன்?
ஈ.வெ.ரா., குறித்து முழுமையாக பேச வில்லை. கொஞ்சம் வேலை இருப்பதால், சிறிய இடைவேளை கொடுத்துள்ளேன். விரைவில் அவர் குறித்து முழுமையான தகவல்களை வெளியே சொல்வேன்.
நாம் தமிழர் கட்சி கொள்கை மீது விருப்பம் உள்ளவர்கள் கட்சியில் பயணிப்பர். முரண்பாடு உள்ளவர்கள், கட்சி மாறி செல்கின்றனர். கட்சியிலிருந்து நிர்வாகிகள் வெளியேறுவது சொந்த விருப்பம், யார் கையிலும், காலிலும் விழுந்து தக்கவைக்க வேண்டிய அவசியம், நாம் தமிழர் கட்சிக்கு இல்லை. கட்சியிலிருந்து விலகுபவர்கள் எதையாவது சொல்லி விட்டுத்தான் செல்வார்கள்.
இவ்வாறு, அவர் கூறினார்.

