'பீட்டா' மீதான புகாரில் உண்மையில்லை மத்திய அரசு தகவல்
'பீட்டா' மீதான புகாரில் உண்மையில்லை மத்திய அரசு தகவல்
ADDED : ஜூலை 26, 2024 08:03 PM
சென்னை:'வெளிநாடுகளில் இருந்து சட்ட விரோதமாக நிதி பெறுவதாக, 'பீட்டா' போன்ற அமைப்புகளுக்கு எதிராக கூறப்பட்ட புகாரில் உண்மையில்லை' என, சென்னை உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
பீட்டா, டபிள்யூ.வி.எஸ்., - ஐ.பி.ஏ.என்., போன்ற விலங்குகள் நல அமைப்புகளுக்கு, வெளிநாட்டு பங்களிப்பு ஒழுங்குமுறை சட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட உரிமங்களை ரத்து செய்ய, மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு உத்தரவிடக்கோரி, விலங்குகள் நல ஆர்வலரான எஸ்.முரளிதரன் என்பவர் வழக்கு தொடர்ந்தார்.
மனுவில், 'பீட்டா போன்ற விலங்குகள் நல அமைப்புகள், சட்ட விரோதமாக வெளிநாடுகளில் இருந்து நிதி பெறுகின்றன. கால்நடைகள் ஆராய்ச்சி சம்பந்தமான நிறுவனங்களையும் நடத்தி வருகின்றன. இதற்கு அரசிடம் உரிய அனுமதியை பெறவில்லை' என்று கூறியிருந்தார்.
இந்த மனு, பொறுப்பு தலைமை நீதிபதி டி.கிருஷ்ணகுமார், நீதிபதி கே.குமரேஷ் பாபு அடங்கிய, 'முதல் பெஞ்ச்' முன், நேற்று முன்தினம் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, மத்திய அரசு தரப்பில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ.ஆர்.எல்.சுந்தரேசன் ஆஜராகி, ''பீட்டா போன்ற அமைப்புகளுக்கு எதிரான புகார் விசாரிக்கப்பட்டது. அந்த குற்றச்சாட்டுகளில் உண்மையில்லை என்பதால், புகார் முடித்து வைக்கப்பட்டுள்ளது,'' என்றார்.
இதையடுத்து மனுதாரரின் புகார் மனு மீது இறுதி உத்தரவு பிறப்பிக்கும்படி, மத்திய அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கை முடித்து வைத்தனர்.

