தி.மு.க., அரசு புனையும் கதைக்கு நாங்கள் வசனம் எழுத முடியாது: பா.ஜ.,
தி.மு.க., அரசு புனையும் கதைக்கு நாங்கள் வசனம் எழுத முடியாது: பா.ஜ.,
ADDED : ஜூலை 11, 2024 10:19 PM

சென்னை:''பா.ஜ., மீது பழி சுமத்த, தி.மு.க., அரசு எழுதிய கதைக்கு, நாங்கள் வசனம் எழுத முடியாது,'' என, தமிழக பா.ஜ., பொருளாளர் எஸ்.ஆர்.சேகர் கூறினார்.
லோக்சபா தேர்தலின்போது, ஏப்., 4ல், பறக்கும் படையினர், தாம்பரம் ரயில் நிலையத்தில், நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலில், சென்னையைச் சேர்ந்த சதீஷ், அவரது சகோதரர் நவீன் ஆகியோரிடம் இருந்து, 4 கோடி ரூபாயை பறிமுதல் செய்தனர்.
'அந்த பணம், லோக்சபா தேர்தலில், திருநெல்வேலி தொகுதியில் போட்டியிட்ட பா.ஜ., வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு கொடுப்பதற்காக எடுத்துச் செல்ல முயன்றுள்ளனர்' என, தேர்தல் பறக்கும் படையினர், போலீசில் புகார் அளித்தனர்.
தாம்பரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, சதீஷ், நவீன் உள்ளிட்ட மூவரை கைது செய்தனர். இந்த வழக்கு, சி.பி.சி.ஐ.டி., விசாரணைக்கு மாற்றப்பட்டதையடுத்து, கோவையில் ஆர்.எஸ்.சேகர் வீட்டிற்கு சென்று சி.பி.சி.ஐ.டி., போலீசார் விசாரித்தனர். அதன்பின், சென்னை எழும்பூரில் உள்ள, சி.பி.சி.ஐ.டி., தலைமை அலுவலகத்தில் ஆஜரான தமிழக பா.ஜ., அமைப்பு பொதுச்செயலர் கேசவவிநாயகத்திடம் விசாரித்து வாக்குமூலம் பெற்றனர்.
இதன்பின், எஸ்.ஆர்.சேகருக்கு, மீண்டும் விசாரணைக்கு ஆஜராக, 'சம்மன்' அனுப்பினர். அதை ஏற்று, எஸ்.ஆர்.சேகர். சென்னை எழும்பூரில் உள்ள, சி.பி.சி.ஐ.டி., தலைமை அலுவலகத்தில், நேற்று ஆஜரானார். அவரிடம், போலீசார் எட்டு மணி நேரம் விசாரித்து, வாக்குமூலம் பெற்றனர்.
விசாரணைக்குப் பின், எஸ்.ஆர்.சேகர் அளித்த பேட்டி:
பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்த, நான்கு கோடி ரூபாய் விவகாரத்தில், எனக்கு தொடர்பு இருப்பது போல, போலீசார் 190 கேள்விகள் கேட்டனர். அதில், பெரும்பாலானவை ஏற்கனவே என்னிடம் கேட்கப்பட்டவை. அதற்கெல்லாம் ஏற்கனவே பதில் அளித்து விட்டேன். அந்த நான்கு கோடி ரூபாய்க்கும், எங்கள் கட்சிக்கோ, எனக்கோ எந்த தொடர்பும் இல்லை என்பதை மீண்டும் ஆணித்தரமாக கூறி உள்ளேன்.
பா.ஜ., மீது பழி சுமத்த வேண்டும் என்பதற்காக, தி.மு.க., அரசு தரப்பில், ஒரு விஷயத்தை அவர்களாகவே உருவாக்கி உள்ளனர். அதற்கு உருவம் கொடுத்து, அதை எங்கள் மீது திணிக்கப் பார்க்கின்றனர். தி.மு.க., அரசின் கதைக்கு, நாங்கள் வசனம் எழுத முடியாது.
இவ்வாறு அவர் கூறினார்.

