'வேர்களை தேடி' திட்டத்தில் 100 பேர் தமிழகம் வருகை
'வேர்களை தேடி' திட்டத்தில் 100 பேர் தமிழகம் வருகை
ADDED : ஆக 02, 2024 12:34 AM

சென்னை: 'வேர்களைத் தேடி' திட்டத்தின் கீழ், தமிழகம் வந்துள்ள, 15 நாடுகளை சேர்ந்த, 100 அயலக தமிழ் இளைஞர்களின் சுற்றுப்பயணத்தை, முதல்வர் ஸ்டாலின் நேற்று துவக்கி வைத்தார்.
இத்திட்டத்தின் கீழ், வெளிநாடுகளில் வசிக்கும் 18 முதல் 30 வயதுக்கு உட்பட்ட தமிழ் இளைஞர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். அவர்கள் தமிழகத்திற்கு வரவழைக்கப்பட்டு, தமிழ் மற்றும் தமிழர்களின் பெருமிதங்களை உணரும் வகையில், தமிழகத்தின் வரலாற்று சிறப்புமிக்க இடங்களுக்கு, அரசு சார்பில் அழைத்துச் செல்லப்படுவர்.
கடந்த ஆண்டு நான்கு நாடுகளைச் சேர்ந்த, தமிழ் இளைஞர்கள் வந்தனர். நடப்பாண்டு இரண்டாம் கட்ட பயணத்திற்கு, 15 நாடுகளைச் சேர்ந்த, 100 வெளிநாட்டு தமிழ் இளைஞர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.
அவர்கள் நேற்று முதல் 15ம் தேதி வரை, மாமல்லபுரம், கடலுார், தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை, துாத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களில், முக்கிய சுற்றுலா தலங்களுக்கு அழைத்துச் செல்லப்பட உள்ளனர்.
இப்பயணத்தை நேற்று தலைமைச் செயலகத்தில் துவக்கி வைத்த முதல்வர் ஸ்டாலின், அவர்களுக்கு துணிகள், பயணக்குறிப்புகள், புத்தகங்கள், அடையாள அட்டைகளை வழங்கினார்.
தமிழக அரசின், 'வேர்களைத் தேடி' திட்டத்தின் கீழ், 15 நாடுகளில் இருந்து தமிழகம் வந்துள்ள, 100 தமிழ் இளைஞர்களின் சுற்றுப்பயணத்தை, முதல்வர் ஸ்டாலின் நேற்று துவக்கி வைத்தார். அருகில், அமைச்சர் மஸ்தான், தலைமை செயலர் சிவ்தாஸ் மீனா.