உடனடி கட்டட அனுமதிக்கு கட்டண விபரம் அறிவிப்பு சென்னையில் சதுர அடிக்கு ரூ.100
உடனடி கட்டட அனுமதிக்கு கட்டண விபரம் அறிவிப்பு சென்னையில் சதுர அடிக்கு ரூ.100
ADDED : ஜூலை 24, 2024 12:30 AM
சென்னை:சுயசான்று அடிப்படையில், 'ஆன்லைன்' முறையில் உடனடி கட்டட அனுமதி பெறுவதற்கான கட்டண விபரங்களை, நகராட்சி நிர்வாகத் துறை வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில், 2,500 சதுர அடி வரையிலான மனைகளில், 3,500 சதுர அடி வரை வீடு கட்டுவதற்கு, சுய சான்று அடிப்படையில் உடனடி கட்டட அனுமதி வழங்கும் திட்டம் துவங்கப்பட்டுள்ளது. கட்டட அனுமதி நடைமுறைகள் எளிதாகி உள்ளதால், இதற்கு பொதுமக்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்துள்ளது.
இதில் பரிசீலனை கட்டணம், உள்கட்டமைப்பு மற்றும் வசதிகள் கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், பிற வகை கட்டணங்களை எப்படி வசூலிப்பது என்ற கேள்வி எழுந்துள்ளது.
இது தொடர்பாக, நகராட்சி நிர்வாகத் துறை பிறப்பித்துள்ள உத்தரவு:
உடனடி கட்டட அனுமதிக்கு ஒருங்கிணைந்த முறையில், கட்டணங்கள் நிர்ணயிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன்படி, சென்னை மாநகராட்சியில், சதுர அடிக்கு, 100 ரூபாய் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
கோவை, திருப்பூர், மதுரை மாநகராட்சிகளில் சதுர அடிக்கு, 88 ரூபாய்; தாம்பரம், சேலம், திருச்சி மாநகராட்சிகளில் சதுர அடிக்கு, 84 ரூபாய் கட்டணம்.
ஆவடி, திருநெல்வேலி, வேலுார், துாத்துக்குடி, ஈரோடு மாநகராட்சிகளில் சதுர அடிக்கு, 79 ரூபாய்; தஞ்சை, நாகர்கோவில், ஓசூர், கடலுார், கரூர், கும்பகோணம், திண்டுக்கல், சிவகாசி, காஞ்சிபுரம் மாநகராட்சிகளில் சதுர அடிக்கு, 74 ரூபாய் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

