5 இடங்களில் 108 டிகிரி!:வட மாவட்டங்களுக்கு வெப்ப அலை எச்சரிக்கை
5 இடங்களில் 108 டிகிரி!:வட மாவட்டங்களுக்கு வெப்ப அலை எச்சரிக்கை
ADDED : ஏப் 23, 2024 08:13 PM
சென்னை:தமிழக வட மாவட்டங்களில், இன்று வெப்ப அலை வீச வாய்ப்புள்ளதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
கோடை வெயில் காரணமாக, நாடு முழுதும் அனைத்து மாநிலங்களிலும், வெப்பத்தின் தாக்கம் அதிகரிக்கிறது. தமிழகம், புதுச்சேரியில், மார்ச் முதல் படிப்படியாக வெயில் அதிகரித்து வருகிறது.
நேற்று மாலை நிலவரப்படி, மாநிலத்தில் அதிகபட்சமாக, ஈரோடு, கரூர் பரமத்தி, வேலுார், திருப்பத்துார் மற்றும் சேலத்தில், 42 டிகிரி செல்ஷியஸ், அதாவது, 108 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவானது.
சென்னை மீனம்பாக்கம், 38; கோவை, பாளையங்கோட்டை, தஞ்சாவூர், 39; திருச்சி, மதுரை விமான நிலையம், நாமக்கல், திருத்தணி, 40; தர்மபுரி, மதுரை, 41 டிகிரி செல்ஷியஸ் என, 15 இடங்களில், 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி வெப்பம் பதிவானது.
கொடைக்கானல், 23; ஊட்டி, 28; வால்பாறை, 30; துாத்துக்குடி, 34; பாம்பன், நாகை, 35; சென்னை நுங்கம்பாக்கம், கன்னியாகுமரி, புதுச்சேரி, 36 டிகிரி செல்ஷியஸ் வெப்பம் பதிவானது.
வரும் நாட்களை பொறுத்தவரை, கடலோரம் அல்லாத தமிழக உள் மாவட்டங்களில், இயல்பு அளவை விட, 4 டிகிரி செல்ஷியஸ் கூடுதலாக, 41 டிகிரி செல்ஷியஸ் வரை வெப்பம் பதிவாகும் என, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கடலோரம் அல்லாத வட மாவட்டங்களில், இன்று வெப்ப அலை வீச வாய்ப்புள்ளது. குமரிக்கடல் பகுதிகளில், வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதால், தென் மாவட்டங்களில் சில இடங்களில், லேசான மழைக்கு வாய்ப்புள்ளது என, வானிலை மையம் அறிவித்துள்ளது.
நேற்று காலை நிலவரப்படி, 24 மணி நேரத்தில், மாநிலத்தில் அதிகபட்சமாக, சோலையாரில், 2; சிங்கம்புணரியில், 1 செ.மீ., மழை பெய்துள்ளது.

