ADDED : ஏப் 18, 2024 12:46 AM
மதுரை:கடந்த 2019 லோக்சபா தேர்தல், 2021 சட்டசபை தேர்தலின்போது நடத்தை விதிகளை மீறியதாக, 13,000 வழக்குகள் பதியப்பட்டதாக, உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தமிழக அரசு தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
கடந்த 2011 சட்டசபை தேர்தலின்போது வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்ததாக, சிலர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. அவர்கள் மீது சம்பந்தப்பட்ட கீழமை நீதிமன்றங்களில் இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
அதை ரத்து செய்யக்கோரி சிலர் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். அந்த மனுக்களை ஏற்கனவே விசாரித்த நீதிபதி பி.புகழேந்தி பிறப்பித்த உத்தரவு:
தேர்தலில் வாக்காளர்களை கவர பணம், உணவு, பரிசுப் பொருட்கள் வழங்கப்படுகின்றன. இவை, அரசியலமைப்பு, ஜனநாயகத்தின் அடிப்படை கட்டமைப்பை தகர்த்து விடும். ஒவ்வொரு தேர்தலிலும் பணம் பட்டுவாடா வழக்குகள் அதிகரிக்கின்றன.
இவற்றை தடுக்க, தகுந்த வழிகாட்டுதல்களை கண்டறிய வேண்டியுள்ளது. 2019 லோக்சபா தேர்தல், 2021 சட்டசபை தேர்தலின்போது வாக்காளர்களுக்கு பணம் வினியோகம் செய்ததற்காக பதிவு செய்யப்பட்ட வழக்குகளின் எண்ணிக்கை, அவற்றின் நிலை குறித்து தமிழக அரசு தரப்பில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.
இவ்வாறு உத்தரவிட்டார்.
அந்த வழக்கை நேற்று மீண்டும் நீதிபதி புகழேந்தி விசாரித்தார்.அரசு தரப்பில், 'தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக 2019ல் 4,349, 2021ல் 8,655 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இவற்றில், 3,147 வழக்குகளில் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது' என அறிக்கை சமர்ப்பித்தது.
வழக்கு விசாரணையை நீதிபதி ஒத்திவைத்தார்.

