பச்சையப்பா கல்லுாரிகளில் 132 காலியிடம் நிபுணர்களை அனுப்ப பல்கலைக்கு உத்தரவு
பச்சையப்பா கல்லுாரிகளில் 132 காலியிடம் நிபுணர்களை அனுப்ப பல்கலைக்கு உத்தரவு
ADDED : ஏப் 28, 2024 01:18 AM
சென்னை: பச்சையப்பா அறக்கட்டளையின் கீழ் இயங்கும் கல்லுாரிகளில், காலியாக உள்ள, 132 உதவி பேராசிரியர் பணியிடங்களை நிரப்ப, பல்கலை தரப்பில் இருந்து இரண்டு நிபுணர்களை அனுப்பும்படி, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னையில் உள்ள பச்சையப்பா அறக்கட்டளையின் கீழ், கல்லுாரிகள், பள்ளிகள் இயங்குகின்றன. கல்லுாரிகளில் காலியாக உள்ள, 132 உதவி பேராசிரியர்கள் பணியிடங்களை நிரப்ப, அறக்கட்டளை நடவடிக்கை எடுத்தது.
கல்லுாரிகளுக்கு இணைப்பு பெற்றிருந்த சென்னை பல்கலை மற்றும் அண்ணாமலை பல்கலையின் நிபுணர்கள், தேர்வுக்குழுவில் இடம் பெறச் செய்யக்கோரி, உயர் நீதிமன்றத்தில் பச்சையப்பா அறக்கட்டளை தரப்பில் முறையிடப்பட்டது.
இம்மனு, நீதிபதி பரத சக்ரவர்த்தி முன், விசாரணைக்கு வந்தது. பச்சையப்பா அறக்கட்டளை போர்டு செயலர் தரப்பில், மூத்த வழக்கறிஞர் ஓம்பிரகாஷ், வழக்கறிஞர் எம்.ஆர்.ஜோதிமணியன் ஆஜராகினர்.
சென்னை பல்கலை, அண்ணாமலை பல்கலை தரப்பில், கூடுதல் அட்வகேட் ஜெனரல்கள் ரமண்லால், ரவீந்திரன், கல்லுாரி இயக்குனரகம் சார்பில் சிறப்பு பிளீடர் டி.ரவிச்சந்தர், கூடுதல் பிளீடர் ஆர்.குமாரவேல் ஆஜராகினர்.
நீதிபதி பரத சக்ரவர்த்தி பிறப்பித்த உத்தரவு:
உதவி பேராசிரியர் பணியிடங்களில், 132 காலியிடங்கள் உள்ளன. கல்லுாரி குழு சார்பில் நியமனங்கள் மேற்கொள்ளப்படுவதால், அரசின் முன் அனுமதி பெற தேவையில்லை என்றும், தேர்வு நடவடிக்கையை தொடர லாம் எனவும் உயர் நீதிமன்றம் ஏற்கனவே உத்தரவிட்டுள்ளது.
இணைப்பு பெற்ற பல்கலை தரப்பில், இரண்டு பிரதிநிதிகளை தேர்வுக்குழுவுக்கு அனுப்ப வேண்டும். ஏற்கனவே, அறிவிப்பு வெளியிடப்பட்டு, விண்ணப்பங்கள் பெறப்பட்டு, தேர்வு நடவடிக்கைக்கு தேதியும் குறிக்கப்பட்டது.
பல்கலை தரப்பில் பிரதிநிதிகளை அனுப்பாததால் அது ரத்தாகி விட்டது. பல்கலை மானிய குழு விதிகளின்படி, நிபுணர்களை அனுப்ப வேண்டியது பல்கலையின் கடமை.
ஆசிரியர்கள் இல்லாமல் மாணவர்கள் இருக்க முடியாது. இதில், தாமதம் செய்ய முடியாது.
எனவே, தேர்வு நடவடிக்கையை தொடர்ந்து நடத்த ஏதுவாக, இரண்டு நிபுணர்களை அனுப்ப, சென்னை பல்கலை மற்றும் அண்ணாமலை பல்கலைக்கு உத்தரவிடப்படுகிறது.
மூன்று வாரங்களில் நிபுணர்கள் நியமனத்தை மனுதாரருக்கு தெரிவிக்க வேண்டும். பின், சட்டப்படி தேர்வுக்குழு, விரைந்து தேர்வு நடவடிக்கையை முடிக்க வேண்டும்.
இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

