ADDED : ஜூலை 13, 2024 11:33 PM
சென்னை:தமிழகம் முழுதும் நேற்று நடந்த, 'குரூப் - 1' பதவிகளுக்கான முதல்நிலை தகுதித்தேர்வை, 2 லட்சத்திற்கும் அதிகமானோர் எழுதியதாக டி.என்.பி.எஸ்.சி., அதிகாரிகள் தெரிவித்துஉள்ளனர்.
தமிழக அரசு துறைகளில், துணை கலெக்டர், போலீஸ் டி.எஸ்.பி., வணிக வரி உதவி கமிஷனர், மாவட்ட வேலைவாய்ப்பு அதிகாரி, மாவட்ட தீயணைப்பு அதிகாரி, ஊரக வளர்ச்சி உதவி இயக்குனர் மற்றும் கூட்டுறவு துணை பதிவாளர் ஆகிய ஏழு பதவிகளில், 90 காலியிடங்களை நிரப்ப அரசு முடிவு செய்துள்ளது.
இதற்கான குரூப் - 1 முதல்நிலை தகுதித்தேர்வு, தமிழகம் முழுதும் நேற்று நடந்தது. இந்த தேர்வில், 300 மதிப்பெண்களுக்கு 200 கேள்விகளுடன், சரியான விடையை தேர்வு செய்யும் வகையில் வினாத்தாள் வடிவமைக்கப்பட்டு இருந்தது.
மொத்தம், 797 தேர்வு மையங்களில் நடந்த தேர்வில் பங்கேற்க, 2.38 லட்சம் பேருக்கு, அரசு பணியாளர் தேர்வாணையமான டி.என்.பி.எஸ்.சி., அனுமதி அளித்துஇருந்தது.
சென்னையில் மட்டும், 124 தேர்வு மையங்களில், 37,891 பேர் தேர்வு எழுத அனுமதி பெற்றனர்.
இந்நிலையில், குரூப் - 1 முதல்நிலை தகுதித்தேர்வு திட்டமிட்டவாறு வெற்றிகரமாக நடந்ததாகவும், அனுமதி அளிக்கப்பட்டவர்களில் 80 சதவீதம், அதாவது 2 லட்சத்திற்கும் அதிகமானோர் தேர்வு எழுதியதாகவும் டி.என்.பி.எஸ்.சி., அதிகாரிகள் தெரிவித்தனர்.

