ADDED : டிச 24, 2024 03:55 AM

சென்னை : தமிழகத்தில் முதல் கட்டமாக, 275 நீதிமன்றங்களுக்கு, புதிதாக இருவர் வீதம், 550 துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் அமர்த்தப்பட்டு உள்ளனர்.
இரு தினங்களுக்கு முன், நெல்லையில் வழக்கு விசாரணைக்கு ஆஜராக வந்த மாயாண்டி என்ற வாலிபர், நீதிமன்ற வாயில் அருகே வெட்டிக் கொல்லப்பட்டார்.
இது குறித்து, தாமாக முன் வந்து விசாரிக்கும் சென்னை உயர் நீதிமன்றம், மாவட்ட நீதிமன்றங்களுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு வழங்க உத்தரவிட்டது.
அதன்படி, முதல் கட்டமாக, தமிழகத்தில் உள்ள 275 நீதிமன்றங்களுக்கு கூடுதல் பாதுகாப்பு அளிக்கப்பட்டு உள்ளது. ஏற்கனவே உள்ள போலீசாருடன், ஒவ்வொரு நீதிமன்றத்திற்கும் புதிதாக இருவர் நியமிக்கப்பட்டு உள்ளனர். அவர்களுக்கு துப்பாக்கி வழங்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து போலீஸ் உயர் அதிகாரிகள் கூறுகையில், 'மாநிலம் முழுதும் உள்ள நீதிமன்றங்களுக்கு, தேவைக்கு ஏற்ப பாதுகாப்பு பலப்படுத்தப்படும். துப்பாக்கி ஏந்திய போலீசார் பணி அமர்த்தப்படுவர்' என்றனர்.