ADDED : ஆக 26, 2024 04:35 AM

திருவையாறு: தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு ராஜா நகரைச் சேர்ந்த செந்தில்குமார் மகன் ஹரிபிரசாத், 16; தஞ்சாவூரில், பிளஸ் -1 படித்து வந்தார்.
திருவையாறு, மேலவட்டம் பகுதியைச் சேர்ந்த ராமலிங்கம் மகன் பிரவீன், 12; திருவையாறில் ஏழாம் வகுப்பு படித்து வந்தார்.
நேற்று காலை 11:00 மணிக்கு ஹரிபிரசாத், பிரவீன் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்டோர், திருவையாறு அய்யப்பன் கோவில் படித்துறை காவிரி ஆற்றில் குளித்துக் கொண்டிருந்தனர். அப்போது, தண்ணீரின் வேகத்தில் ஹரிபிரசாத், பிரவீன் அடித்துச் செல்லப்பட்டனர்.
நண்பர்களின் அலறல் சத்தம் கேட்டு, சக நண்பர்கள் கரைக்கு வந்து பொதுமக்களிடம் தகவல் அளித்தனர். தண்ணீரில் இழுத்துச் செல்லப்பட்ட இருவரும் நீரில் மூழ்கினர்.
தீயணைப்பு வீரர்கள், ஆற்றில் மூழ்கிய சிறுவர்களை, இரண்டு மணி நேர போராட்டத்திற்கு பின் பிணமாக மீட்டனர். திருவையாறு போலீசார் விசாரிக்கின்றனர்.