ADDED : மார் 29, 2024 06:48 AM

சென்னை: லோக்சபா தேர்தலையொட்டி, அடுத்த மாதம், 17, 18ம் தேதிகளில், அரசு போக்குவரத்து கழகங்கள் சார்பில், 2,000க்கும் மேற்பட்ட சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன.
அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறியதாவது:
நுாறு சதவீதம் ஓட்டுப்பதிவு என்ற இலக்கு நோக்கி, தேர்தல் ஆணையம் பணியாற்றி வருகிறது. பொது மக்கள் தங்களுக்கு ஓட்டு உள்ள ஊர்களுக்கு சென்று ஓட்டளிக்க வசதியாக, தமிழகம் முழுதும் சிறப்பு பஸ்களை இயக்க உள்ளோம். அதன்படி, ஏப்ரல், 17, 18ம் தேதிகளில், மாவட்டங்கள் தோறும் பயணியரின் தேவைக்கு ஏற்ப விடிய விடிய சிறப்பு பஸ்கள் இயக்க உள்ளோம்.
சென்னையில் இருந்து முக்கியமான நகரங்கள் மற்றும் மாவட்டங்களுக்கு, 2,000க்கும் மேற்பட்ட சிறப்பு பஸ்களை இயக்க உள்ளோம்.
அரசு விரைவு பஸ்களில், 60 நாட்களுக்கு முன்பே, டிக்கெட் முன்பதிவு செய்யும் வசதி இருப்பதால், பொது மக்கள் தங்கள் பயணத்தை முன்கூட்டியே திட்டமிட்டு, www.tnstc.in எனும் இணையதளம் மற்றும் tnstc செயலி வாயிலாக முன்பதிவு செய்து பயணிக்கலாம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

