ADDED : மார் 03, 2025 08:28 AM

ஒகேனக்கல் : வார விடுமுறை தினமான நேற்று, 20 ஆயிரம் சுற்றுலா பயணிகள் ஒகேனக்கல்லில் குவிந்தனர். காவிரியாற்றில் உற்சாகமாக பரிசல் பயணம் செய்து மகிழ்ந்தனர்.
தர்மபுரி மாவட்டத்தின் சிறந்த சுற்றுலா தலமான ஒகேனக்கல்லுக்கு, கர்நாடகா, ஆந்திரா, கேரளா, என பல மாநிலங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். நேற்று வார விடுமுறை தினம் என்பதால், ஒகேனக்கல் வந்த சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை, 20,000க்கும், மேல் காணப்பட்டது. ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நேற்று, 1,200 கன அடி நீர்வரத்தானது.
இதனால் பயணிகள் உற்சாகமாக காவிரியாற்றில் குளித்தும், குடும்பத்தோடு, பாறைகளுக்கு இடையே ஆற்றில் பரிசல் பயணம் செய்தும் மகிழ்ந்தனர். கோத்திக்கல் பரிசல் துறையில் இருந்து, மெயின் பால்ஸ், மணல் திட்டு, பெரியபாணி உள்ளிட்ட இடங்களுக்கு இயக்கப்பட்டதால், காவிரியாற்றின் எழில்மிகு அழகை மக்கள் கண்டு ரசித்தனர். மேலும் பலர் பிரசித்தி பெற்ற மீன் குழம்பு சமைத்து சாப்பிட்டும், மசாஜ் செய்தும் பொழுதை கழித்தனர்.