ADDED : ஜூலை 24, 2024 09:07 PM
சென்னை:இலங்கை கடற்படையினரால், இந்த ஆண்டு மட்டும், 250 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். சிறையில் உள்ள, 87 மீனவர்கள் மற்றும் 175 படகுகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்கக் கோரி, வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு, முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார்.
கடிதத்தில், அவர் கூறியிருப்பதாவது;
ராமேஸ்வரத்தை சேர்ந்த ஒன்பது மீனவர்கள், கடந்த 22ம் தேதி இரண்டு படகுகளில், மீன் பிடிக்க சென்றனர். அவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்; படகுகளை பறிமுதல் செய்துள்ளனர். இந்த ஆண்டு ஜனவரி முதல், இம்மாதம் 22ம் தேதி வரை, 250 மீனவர்கள், இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த 10 ஆண்டுகளில், ஓராண்டில் மிக அதிகபட்சமான மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதனால் மீனவ மக்கள், மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளனர். பிரச்னையின் தீவிரத்தை உணர்ந்து, இலங்கை சிறையில் உள்ள 87 மீனவர்களையும், 175 படகுகளையும் விரைவாக விடுவிக்க, தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

