உண்ணி காய்ச்சலால் 2,639 பேர் பாதிப்பு: 9 மாவட்டங்களில் டெங்கு அதிகரிப்பு
உண்ணி காய்ச்சலால் 2,639 பேர் பாதிப்பு: 9 மாவட்டங்களில் டெங்கு அதிகரிப்பு
UPDATED : ஜூலை 26, 2024 03:43 AM
ADDED : ஜூலை 26, 2024 01:03 AM

சென்னை: ''தமிழகத்தில் உண்ணி காய்ச்சலால், 2,639 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், ஒன்பது மாவட்டங்களில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருகிறது,'' என, மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் சுப்பிரமணியன் கூறினார்.
சென்னை, தி.நகரில், மழைக்கால நோய்களுக்கான முன்னெச்சரிக்கை சிறப்பு முகாமை, அமைச்சர் சுப்பிரமணியன் நேற்று துவக்கி வைத்தார்.
பின், அவர் அளித்த பேட்டி:
பருவ மழையால் ஏற்படும் நோய் பாதிப்புகளை கண்டறிந்து, சிகிச்சை அளிக்கும் பணி நடந்து வருகிறது. இதனால், 3 ஆண்டுகளாக மழைக்கால நோய் பாதிப்பு கட்டுக்குள் உள்ளது. தற்போது, டெங்கு, எலிக்காய்ச்சல், உண்ணி காய்ச்சல், மஞ்சள் காமாலை, இன்புளுயன்சா போன்ற காய்ச்சல் பாதிப்புகள் உள்ளன.
சென்னை, கோவை, கிருஷ்ணகிரி, திருப்பத்துார், தேனி, மதுரை, திருநெல்வேலி, நாமக்கல், தஞ்சாவூர் ஆகிய ஒன்பது மாவட்டங்களில், டெங்கு பாதிப்பு பரவலாக உள்ளது. இந்தாண்டில் இதுவரை டெங்குவால், 6,565 பேர் பாதிக்கப்பட்டு, மூன்று பேர் உயிரிழந்துள்ளனர்.
கடலுார், தஞ்சாவூர், சென்னை ஆகிய மூன்று மாவட்டங்களில், உண்ணி காய்ச்சல் பரவலாக உள்ளது. இதில், 2,639 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னை, கன்னியாகுமரி, திருவள்ளூர் மாவட்டங்களில் எலிக்காய்ச்சல் உள்ளது; இதுவரை, 1,481 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
மேலும், மஞ்சள் காமாலை பாதிப்பு, சென்னை, திருச்சி, தேனி போன்ற மாவட்டங்களில் பரவலாக உள்ளது. இதனால், 1,750 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இன்புளுயன்சா காய்ச்சலால், 56 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், சென்னை, கோவை, காஞ்சிபுரம் மாவட்டங்களில் இதன் பாதிப்பு உள்ளது.
அத்துடன், பன்றிக் காய்ச்சலால், 390 பேர்; 'ரேபிஸ்' நோயால், 22 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில், டெங்கு, ரேபிஸ் நோய் தவிர, மற்ற பாதிப்புகளில் உயிரிழப்பு இல்லை. டெங்கு பாதித்தவர்கள் கடைசி நேரத்தில் சிகிச்சைக்கு வரும்போது, உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து உயிரிழப்பு ஏற்படுகிறது.
மாநிலத்தின் ஏதாவது ஒரு பகுதியில், மூன்றுக்கும் மேற்பட்டோர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டால், அங்கு உடனடியாக மருத்துவ முகாம் நடத்தப்படுகிறது. தற்போது, அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில், தினசரி 2,972 பேர் காய்ச்சலுக்கு சிகிச்சை பெறுகின்றனர். அவர்கள் எவ்வித காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதை கண்டறிந்து, சிகிச்சை அளிக்கப்படுகிறது.
கொசு ஒழிப்பு பணியில் மாநிலம் முழுதும், 22,384 பேர் ஈடுபட்டு உள்ளனர். கொசு ஒழிப்பு மருந்துகள் கையிருப்பில் உள்ளன. காய்ச்சல் பாதிப்பு இருந்தால், தன்னிச்சையாக மருந்து உட்கொள்ளாமல், டாக்டரிடம் சிகிச்சை பெற வேண்டும். அவசர உதவிக்கு 104, 108 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
கேரளாவில், 3 பேர் 'நிபா' வைரசால் உயிரிழந்ததால், தமிழக எல்லை பகுதியான நடுங்கனி, சோழடி, தளுர், நம்பியார்குன்னு, பட்டாவயல் போன்ற ஐந்து இடங்களில் நிரந்தர மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டு, பயணியரை பரிசோதிக்கும் பணி நடந்து வருகிறது. நிபா வைரஸ் பாதிப்பு, தமிழகத்தில் இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.

