ADDED : மே 16, 2024 01:28 AM
சென்னை:டெல்டா மாவட்டங்களில், 26 இடங்களில் மணல் குவாரிகள் திறப்பதற்கான முயற்சியில், நீர்வளத்துறை இறங்கியுள்ளது.
அ.தி.மு.க., ஆட்சியில் மணல் குவாரிகளுக்கு பதிலாக, எம்.சாண்ட் விற்பனைக்கு முக்கியத்துவம் தரப்பட்டது. தி.மு.க., அரசு பொறுப்பேற்றதும், திருச்சி, கரூர், தஞ்சாவூர், அரியலுார், வேலுார், திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில், 30க்கும் மேற்பட்ட இடங்களில் மணல் குவாரிகள் திறக்கப்பட்டன.
ஆனால், விதிகளை மீறி மணல் அள்ளி, அதன் வாயிலாக சட்ட விரோத பண பரிமாற்றம் நடந்ததாக புகார் எழுந்தது. இதை யடுத்து, மணல் குவாரிகளில் அமலாக்க துறையினர் ரெய்டு நடத்தினர். லோக்சபா தேர்தல் மற்றும் அமலாக்கத்துறை ரெய்டு காரணமாக, மணல் குவாரிகள் மூடப்பட்டு உள்ளன.
இந்நிலையில், டெல்டா மாவட்டங்களில், 26 இடங்களில் மணல் குவாரி களை திறப்பதற்கான முயற்சியில், நீர்வளத்துறை இறங்கியுள்ளது. இதற்காக, சுற்றுச்சூழல் துறை அனுமதி பெறுவதற்கான பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன.